1970-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. இதன் வாடகையை உயர்த்தி, கடந்த 2017ம் ஆண்டு வீட்டு வசதித் துறை அரசாணை பிறப்பித்தது.
இதை ரத்து செய்து பழைய வாடைக முறையை பின்பற்ற வேண்டும் என வாடகைதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் சமர்பித்த ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி வாடகையை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், அரசு குடியிருப்புகளில், வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது, இதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
எனவே, விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு குடியிருப்பில் விதிகளுக்கு முரணாக ஒதுக்கீடு பெற்றவர்களை காலி செய்ய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.