தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் புதன்கிழமை (அக். 24) திடீரென தில்லி செல்லவுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியாகக் கூடும் என தகவல்கள் வெளியான நிலையில், தமிழக ஆளுநர் தில்லி செல்லவுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாகபுரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க உள்ளார்.
திடீர் தில்லி பயணம்: தமிழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் அவர், புதன்கிழமை திடீரென தில்லி செல்லவுள்ளார். புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களும் தில்லியில் இருக்கும் அவர் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது அளிக்கப்பட்ட புகார், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் சூழல் ஆகிய பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் ஆளுநர் புரோஹித் விவாதிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.