தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வந்தனர்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பார்ட்லீ உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிலும் 15 மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளை திங்கள்கிழமை பார்வையிட்டனர். இவர்களிடம் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் பேசியது:
தமிழ் மொழி முதன்முதலில் கல்வெட்டுகளிலும், பின்பு ஓலைச்சுவடிகளிலும் ஏடுகளாகவும் தட்டச்சாகவும் தற்போது கணினி வடிவத்திலும் எழுதப்பட்டு வருகிறது. எனவே, வீட்டில் இருக்கும்போதும், உங்களுக்கிடையே பேசும் போதும் தமிழில் பேச வேண்டும். காலந்தோறும் தமிழ் மொழி மாறிக்கொண்டே வருகிறது. கணினி மொழியில் தமிழ் மொழியின் பயன்பாடும் மாறிக்கொண்டே வருகிறது. எனவே, அதை நோக்கி நீங்களும் செல்ல வேண்டும்.
மேலும், தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழில் பேசுங்கள், பிறரிடம் பிற மொழியில் பேசுங்கள். தமிழ் மொழி பேசும்போது பிற மொழிக் கலப்பில்லாமல் பேச வேண்டும். அதுதான் தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும் என்றார் துணைவேந்தர்.
பின்னர், துணைவேந்தரிடம் சிங்கப்பூர் மாணவர்கள் தமிழ் மொழிப் பற்றியும், தமிழ்ப் பண்பாடு குறித்தும் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறைத் தலைவர் கு. சின்னப்பன், சிங்கப்பூர் மாணவர்களுக்கு வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், ஓலைச் சுவடித் துறை, கல்வெட்டியியல் போன்ற துறைகளைக் காண்பித்து அத்துறைகள் மேற்கொண்டு வரும் தமிழ்ப்பணி பற்றியும், ஆய்வுகள் குறித்தும் விளக்கினார்.