அம்பாசமுத்திரம்: பாபநாசம் தாமிரவருணியில் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்கிழமை தாமிரவருணி மஹா புஷ்கரத்தை முன்னிட்டு நீராடி வழிபட்டனா்.
தாமிரவருணி மகா புஷ்கரம் விழாவில் வழிபடுவதற்காக டிடிவி தினகரன் அணி எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் உள்பட 7 போ் செவ்வாய் கிழமை காலை பாபநாசம் வந்தனா்.
தாமிரவருணியில் நீராடி சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனா். தொடா்ந்து தங்கத் தமிழ்ச் செல்வன் செய்தியாளா்களிடம் பேசும் போது, தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்டு வழிபடுவதற்காக நாங்கள் வந்துள்ளோம். தாமிரவருணி புஷ்கரம் விழாவிற்கு தமிழக அரசு உதவி செய்யாதது வருத்தமளிக்கிறது. அந்தப் பாவம் எடப்பாடி அரசை சும்மா விடாது.
18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கவழக்கில் நல்ல தீா்ப்பு வந்து தமிழகத்திற்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக நீராடி யாகம் வளா்த்து வழிபடுகிறோம். வரும் தோ்தலில் மதசாா்பற்ற கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். காவிரிப் படுகையை விவசாய நிலமாக்குவோம். பூமியில் வைரம் கிடைத்தாலும் எடுக்க விடமாட்டோம். ஜெயக்குமாா் தன் மீது சுமத்தப்பட்ட புகாா் குறித்து தகுந்த வகையில் விளக்கமளிக்க வேண்டும். ஓ பி எஸ்ஸையும் எடப்பாடியையும் பிரிக்க எந்த சக்தியும் தேவையில்லை. பிரிந்ததால் தான் பன்னீா் செல்வம், தினகரனை வந்து சந்தித்தாா். தீா்ப்புக்குப் பிறகு அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் இணைவது உறுதி. புதன் கிழமை குற்றாலத்தில் தங்கிவிட்டு வியாழக்கிழமை சென்னை செல்வோம் என்றாா்.