ஆறுமுகசாமி ஆணையத்திற்கு நான்கு மாதம் கால நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக அரசு நியமித்தது. தொடர்ந்து இரண்டு நாடகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் இந்த ஆணையமானது செய்லபடத் துவங்கியது.
இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினா்கள், முன்னாள் தலைமைச் செயலா்கள், அரசு மருத்துவா்கள், அப்பல்லோ மருத்துவா்கள், சசிகலாவின் உறவினா்கள் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். சாட்சியம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவா்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணை ஆணையமே தானாக முன்வந்து போயர்கார்டன் தொடங்கி அப்போல்லோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய 110 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. ஏற்கனவே விசாரணையை முழுமையாக நிறைவு செய்யும் பொருட்டு இந்த ஆணையத்திற்கு இரண்டு முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால், குறைந்தபட்சம் 4 மாதம் கால அவகாசம் கேட்டு ஆணையத்தின் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்றாவது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு அளித்து தமிழக அரசு புதனன்று உத்தரவிட்டுள்ளது.