பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து காலை இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கவனக் குறைவால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்க அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது தளர்வான ஆடைகளை உடுத்தக் கூடாது, பட்டாசு வெடிக்கும் இடத்துக்கு அருகே வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும், ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்டவெளியில் வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
பள்ளியில் காலை இறைவணக்கத்துக்குப் பிறகு அல்லது மாணவர்கள் அணி திரளும்போது தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்ற வேண்டும். மேலும், தீ பாதுகாப்பு குறித்த வரைபட போட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.