குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவம்: தப்பியோடிய தாய் அபிராமி கைது

சென்னை அருகே குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான தாய் நாகர்கோயிலில் கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவம்: தப்பியோடிய தாய் அபிராமி கைது

சென்னை அருகே குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான தாய் நாகர்கோயிலில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், வங்கியில் வேலைப்பளு காரணத்தால், வங்கியிலேயே வெள்ளிக்கிழமை இரவு விஜய் தங்கினார். சனிக்கிழமை அதிகாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. 

உடனே வீட்டுக்குள் சென்ற விஜய், படுக்கை அறையில் குழந்தைகள் அஜய்யும், காருனிகாவும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், தனது மனைவி அபிராமியை தேடினார். ஆனால் அங்கு அபிராமி இல்லாதது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, தனது குழந்தைகள் இறந்து கிடப்பதைப் பார்த்து விஜய் கதறி அழுத சத்தம் கேட்டு, அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
 உடனே அவர்கள், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு குழந்தைகளின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இரு குழந்தைகளும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கணவர்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததும், மேலும் அபிராமி அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் நெருக்கமாக இருந்ததும் போலீஸாருக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், அபிராமியே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அந்த நபருடன் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமறைவாக இருக்கும் அபிராமியை போலீஸார் தீவிரமாக தேடினார்.

இந்நிலையில், குழந்தைகளின் கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தாய் அபிராமி, நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com