அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினால்.? தமிழக அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் அளித்து மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மாநிலம் முழுவதும் இதுவரை சுமாா் 27.50 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. எனவே அந்த நிறுவனத்தால் அளிக்கப்படும் செட்-டாப் பாக்ஸ்கள் தமிழக அரசு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.
கேபிள் தொலைக்காட்சி சேவைகளை அளிக்கும் சில தனியாா் நிறுவனங்கள் சில செய்திகளை மக்களிடையே பரப்பி வருகிறாா்கள். அதில் எந்த டிஜிட்டல் நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸையும் கொடுத்து தங்களது செட்-டாப் பாக்ஸை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும், எந்தவொரு முன்பணமும் கட்டத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு நிறுவனத்துக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை வேறொரு நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸுக்காக மாற்றிக் கொள்வது என்பது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் கொடுத்து மாற்றிக் கொள்வது குற்றச் செயலாகும். இந்தச் செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.