சசிகலாவின் உடல் நலன் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்துக்குச் சென்றது தற்போதைய கர்நாடக முதல்வர் குமாரசாமிதான். எனவே, தற்போது காவிரி விவகாரத்தில் அவர் கூறும் எந்த வார்த்தைகளையும் நம்பக் கூடாது. தற்போது காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 15 ஆண்டுகளுக்கு யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த நிலையில், தற்போது மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டினால், மீண்டும் பிரச்னை உருவாகும். அதன்பிறகு கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதிக்காது.
சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவரது உடல் நலன் சீராக உள்ளது என்றார்.