லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக கடவுச்சீட்டு: மத்திய அரசு தகவல்

கடவுச்சீட்டைப் புதுப்பிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடவுச்சீட்டைப் புதுப்பிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் தாக்கல் செய்த மனுவில், எனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விண்ணப்பித்தேன். என் மீதுள்ள குற்ற வழக்கைக் காரணம் காட்டி எனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனது கடவுச்சீட்டை புதுப்பித்துத் தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இது தொடர்பாக கோவை காவல்துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், மார்ட்டின் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்தத் தகவலை மறைத்து அவர் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞர் என்.ரமேஷ் கூறியதாவது: மார்ட்டின் மீது கேரள மாநிலத்தில் ரூ.1, 400 கோடி ஊழல் செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் லாட்டரி ஊழல் தொடர்பாக தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இந்த தகவல்கள் எதையும் குறிப்பிடாமல் மார்ட்டின் கடவுச்சீட்டு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்' எனத் தெரிவித்தார். அப்போது மார்ட்டின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், மார்ட்டின் தன் மீதான வழக்கு விவரங்களை மறைக்கவில்லை என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்குரைஞர் என்.ரமேஷ், மார்ட்டின் அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், எர்ணாகுளம் தலைமை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனுமதி கோரி விண்ணப்பித்தால், தற்காலிக அடிப்படையில் அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு வழக்குரைஞர் இது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com