ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு வழக்குரைஞர்களின் குறுக்கு விசாரணைக்காக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்ஜ் ஆஜர்: சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் ஏற்கெனவே ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். அதனடிப்படையில், அவரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை குறுக்கு விசாரணை நடத்தவிருந்தனர். ஆனால், சில நிர்வாகக் காரணங்களால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த குறுக்கு விசாரணையை ஆணையம் ஒத்தி வைத்தது. இதுதொடர்பாக ஜார்ஜுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தகவல் அவருக்குத் தெரியாததால் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜார்ஜ் வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆஜரானார். அங்கு குறுக்கு விசாரணை நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வேறொரு நாளில் குறுக்கு விசாரணை நடைபெறும் எனவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜார்ஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அழைப்பாணை: இந்நிலையில், அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் வெள்ளிக்கிழமையும் (செப். 7), அப்பல்லோ முடநீக்கியல் மருத்துவர் ராஜ் பிரசன்னா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமையும் (செப். 10), தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவரும், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலருமான ரமேஷ் சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் விக்னேஷ், ரவிவர்மா ஆகியோர் செவ்வாய்க்கிழமையும் (செப். 11) அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் பாபு கே ஆப்ரகாம், தீவிர சிகிச்சை பிரிவு தொழில்நுட்ப அலுவலர் மதிவாணன் ஆகியோர் புதன்கிழமையும் (செப். 12) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது.