திமுகவின் பல இடையூறுகளைத் தாண்டி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைதிப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்காளர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று வாக்காளர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அக்கட்சியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இறந்த 30-ஆவது நாளையொட்டி சென்னையில் அமைதிப் பேரணி நடத்துவதாக அறிவித்து அதையும் நடத்தி காண்பித்து விட்டார். மு.க.அழகிரி நடத்திய அப்பேரணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி மு.க.அழகிரி அமைதிப் பேரணியை வெற்றிகரமாக நடத்தி தன்னை நிரூபித்துள்ளார். மு.க.அழகிரியின் திறமையை இதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அவரின் அரசியல் எதிர்காலம் போகப் போகத்தான் தெரியும்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்றார்.