தவறுதலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பொறியாளர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ) நடத்திய குரூப்-2 தேர்வுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நான் விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தில் எனது பிறந்த தேதி மற்றும் பிளஸ் 2 சான்றிதழ் எண்ணை தவறாக குறிப்பிட்டு விண்ணப்பித்து விட்டேன். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நான் தேர்வில் 25 ஆவது இடம் பிடித்தேன். இதனையடுத்து தேர்வாணையம் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை, சான்றிதழ் சரிபார்ப்புக்காக இணயதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது. நானும் எனது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தேன். ஆனால் நான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.
 இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கேட்ட போது, எனது பிறந்த தேதி மற்றும் பிளஸ் 2 சான்றிதழ் எண்ணில் மாற்றம் இருப்பதால் என்னை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை எனத் தெரிவித்தனர். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த போது தெரியாமல் தவறு ஏற்பட்டு விட்டது. எனவே, என்னை கலந்தாய்வில் அனுமதிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த மனு நீதிபதி சத்ருஹன புஜ் ஹரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் விமல்,பி.கிரிம்சன், வி.ருத்ராபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரை டிஎன்பிஎஸ்சி, கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், கலந்தாய்வின் முடிவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com