திரைப்பட குணசித்திர நடிகர் கோவை செந்தில் (74) உடல்நலக் குறைவால் கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் உள்ள பூமலூர் ஊராட்சி, பள்ளிபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1966இல் பணியில் சேர்ந்த இவர், 1987இல் வங்கி வேலையிலிருந்து விலகி, முழுநேர நடிகரானார்.
இயக்குநர் கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகரான இவர், ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, படையப்பா உள்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கோவை, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். சூலூர், பெரிய குளக்கரை எரிவாயு மயானத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
இவருக்கு மனைவி லட்சுமி, மகன் திலக், மகள் நர்மதா ஆகியோர் உள்ளனர்.