சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, முன்பு கூறியது போலவே, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களில் நிச்சயமாக 2 நாட்களாவது சென்னையில் மழை பெய்யும். சென்னை அதன் மழைப் பங்கை இந்த நாட்களில் பெற்றுவிடலாம்.
முதலில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி பிறகு அது கடற்கரை மாவட்டங்களுக்கும் பரவும். கடற்கரை மாவட்டங்களில் இரவு அல்லது அதிகாலையில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியில் 8.6 செ.மீ. மழையும், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் 4 செ.மீ. மழையும் பதிவானது.
மேலும், மதுரை, நீலகிரி, வேலூர், விருதுநகர், தருமபுரி, தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.