விளாச்சேரியில் நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோயில்கள் மற்றும் வீடுகளில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் ஐஸ்வரியமும், லட்சுமி கடாட்சமும், சகல பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 9 நாள்கள் வீடுகளிலும்,கோயில்களிலும் விதவிதமான பல்வேறு பொம்மைகளை கொலுவாக வைத்து நவராத்திரி கொண்டாடப்படும்.
இந்த விழாவுக்கென திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி கிராமத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் பொம்மைகளை உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர்.
மேலும் இந்த கொலுமொம்மைகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. விளாச்சேரி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொலு மொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இங்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்புள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கவுள்ளதையடுத்து கொலுபொம்மைகள் தயாரிக்கும் பணியும், விற்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிறுவர்களை கவரும் விதத்தில் தொலைக்காட்சி தொடரில் வெளியாகும் கார்ட்டூன் கதாபாத்திரங்களான மோட்டு, பட்லு, காட்டுபூச்சி, சிங்கம், காட்டேரி, டாக்டர் ஜர்கா, காஜிதாரம் உள்ளிட்டவைகளும், கள்ளழகர் குதிரைமேல் வரும் செட், கிருஷ்ண லீலா, ஆழ்வார்கள் செட், நாயன்மார்கள் செட், கொழுக்கட்டை சாப்பிடும் மொட்டை விநாயகர் உள்ளிட்ட பலவிதமான பொம்மைகள் இந்த ஆண்டு புதுவரவுகளாக உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் 3 இன்ச் அளவிலிருந்து ஒன்றரை அடி வரை களிமண் பொம்மைகளாகவும்,1 அடி முதல் 2 அடிவரை காகிதக்கூழ் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.
நவராத்திரி விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரவு பகலாக தொழிலாளர்கள் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொம்மை தயாரிக்கும் பத்மாவதி கூறியது: நாங்கள் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப ஆர்டரின் பேரிலும் பொம்மைகளை தயாரித்து வருகிறோம். கொலு மொம்மைகள் ரூ.30 முதல் ரூ.10,000 ஆயிரம் வரை எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. அரசு பொம்மை தயாரிக்கும் மூலப்பொருள்களை எங்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.
இது குறித்து சென்னைச்சேர்ந்த வாடிக்கையாளர் உமா கூறுகையில்: இங்கு தயாரிக்கும் பொம்மைகள் களிமண்ணால் செய்யப்பட்டது என்றாலும், தத்ரூபமாக உள்ளன. இங்கு பொம்மைகள் விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளது. மேலும் புதுப்புது ரகங்களில் கிடைக்கிறது என்றார்.