அரசின் திட்டங்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
கரூர் வெங்கமேடு வந்த அவர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் மேலும் கூறியது:
8 வழிச்சாலைக்கு நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களைச் செய்கிறது. அதை அங்கே இருக்கும் மக்கள் முழுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரையில் மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. மாறாக நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவதுதான் சிறந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து வரும் 14-ம் தேதி சென்னை ஆட்சியரகம் முன் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.
பேட்டியின்போது கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் நாட்ராயன், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், நெசவாளர் அணி மாநிலத் தலைவர் எம். ராஜேஷ், மாவட்டத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.