பொதுக்கூட்டத்தில் தனிநபரை அவதூறாகப் பேசியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் மீது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் கடந்த மார்ச் 21 -ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.மணிவாசகத்தின் தூண்டுதலின் பேரில் இரா.முத்தரசன் தன்னை மிரட்டும் வகையில் பேசியதாக, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.சேகர் புகார் அளித்தார். ஆனால், அப்புகாரின்படி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லையாம். இதுகுறித்து, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எம்.சேகர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு கண்டிப்பான உத்தரவை கடலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் அண்மையில் பிறப்பித்தது.
இதையடுத்து, இரா.முத்தரசன், டி.மணிவாசகம் ஆகியோர் மீது மிரட்டல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.