டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மானிய டீசலை கூடுதலாக வழங்க வலியுறுத்தியும் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற பாம்பன் விசைப் படகு மீனவர்கள், வியாழக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் மீன்பிடித் தொழிலில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
தொடர்ந்து டீசல் விலை உயர்வு காரணமாக, மீனவர்களுக்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது என்றும், மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனராம்.
எனவே, மத்திய-மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும். மீனவர்களுக்கு மானிய டீசலை கூடுதலாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஞாயிற்றுகிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, புதன்கிழமை இரவு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள், வியாழக்கிழமை காலை விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்குச் சென்றனர்.