தமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தடை விதிக்க கோரிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த வாசுகி கோழிப் பண்ணை உள்ளிட்ட 4 தனியார் கோழி பண்ணைகள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், அரசு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை குறித்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மொத்த விற்பனை பண்ணைகள் மற்றும் வெளி மாநில கோழிப் பண்ணைகள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்தப்புள்ளி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களால் எங்களைப் போன்ற தமிழகத்தில் உள்ள தனியார் கோழி பண்ணைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இதனையடுத்து, கடந்த 5-ஆம் தேதி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'முட்டை கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், அதற்கு மனுதாரர் தரப்பில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முட்டைக் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை வரும் 25-ஆம் தேதி வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.