ரௌடித்தனம் செய்யும் திமுகவினர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், திமுகவுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்னைகள், விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை திமுக அனுமதிக்காது.
தனிநபரைவிட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரௌடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும், திமுக விதிகளின்படி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.