2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இ உடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்ற என்.சி.இ.ஆர்.டியின் விதிகளை பின்பற்ற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மத்திய அரசு, சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டியும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில், 2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, மொழி மற்றும் கணிதம் என இரண்டு பாடங்கள் மட்டுமே கற்றுத்தர வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டியின் விதிகள் வரையறுக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என சிபிஎஸ்இ கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த விதிகள் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் எனவும் தீர்ப்பளித்தார்.
இதுதொடர்பான சுற்றறிக்கையை மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சுற்றறிக்கை அனுப்பத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.