ஏழு பேர் விடுதலை விவகாரம்: உள்துறைக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை; ஆளுநர் மாளிகை விளக்கம்

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக விளக்கம் கோரி மத்திய உள்துறைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று
ஏழு பேர் விடுதலை விவகாரம்: உள்துறைக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை; ஆளுநர் மாளிகை விளக்கம்

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக விளக்கம் கோரி மத்திய உள்துறைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக சட்டப்பூர்வ விளக்கங்கள் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட விளக்கம்:-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
சிக்கலான வழக்கு: இந்த விவகாரத்தில், மத்திய உள்துறைக்கு ஆளுநர் மாளிகை சார்பில் எந்தவொரு குறிப்பும் அனுப்பவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று. இதில் சட்ட ஆய்வு, நிர்வாக ஆய்வு, அரசியல் சாசன ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன. இது தொடர்பான ஆவணங்கள், வழக்குகளின் நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசின் பரிந்துரை ஆகிய அனைத்தும் தமிழக அரசிடமிருந்து வெள்ளிக்கிழமைதான் (செப்.14) ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இந்தப் பரிந்துரை மீதான ஆய்வை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.
சட்டப்படி முடிவு: இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் உள்பட அனைத்து ஆலோசனைகளும் தேவைக்கேற்ப பெறப்படும். அதன் அடிப்படையில் சட்டப்படி பாரபட்சமின்றி முடிவு எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்...: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் கருணை மனுவை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
5 நாள்கள் கழித்து...: இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.9) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கான பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைப்பது என அன்றைய தினம் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com