புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தும் சம்பவத்துக்கு சிறைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.
புதுகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ள விவகாரத்திற்கு சிறைத்துறை அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன். தங்க. தமிழ்செல்வன் அதிமுகவில் சேரப் போவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். பாதுகாப்பு ஏதுமின்றி அமைச்சர் தனியாக அவருடைய தொகுதிக்குள் சென்று பத்திரமாக திரும்பி வந்துவிட்டாலே எங்கள் பக்கம் உள்ள எம்எல்ஏக்களை அவர் பக்கம் அனுப்பி வைக்கிறேன்.
குட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேறு யாரையும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினரே தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் எனக்கும் எவ்வித மறைமுக உறவும் கிடையாது. துரோகிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவதோடு, அவர்களை அரசியலில் இருந்தே நீக்குவதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி போன்று செயல்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றோரெல்லாம் தேர்தல் நேரத்தில் காணாமல் போய்விடுவார்கள். அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளித்துவந்த நிலையில் திடீரென பாஜகவுக்கும், திமுகவுக்கும் உறவு ஏற்பட்டிருப்பதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியதன் மூலம் அதிமுகவுக்கு பாஜக கதவடைத்திருப்பதாகத் தெரிகிறது என்றார்.