பாஜகவினர் தாக்கியது உண்மைதான் என்று ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரது பின்னால் நின்று கொண்டிருந்த நபர், அக்கா...பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது' என்று குறிப்பிட்டு அருகில் வர முயன்றார். அவரை தமிழிசையின் அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் தாக்கியதாக தகவல் பரவியது. அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் கதிர் என்பதும் அவர் ஜாபர்கான்பேட்டை ஆறுமுகம் தெருவில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கதிரின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்றார் தமிழிசை. அவரிடம் இனிப்புகளை வழங்கியதுடன், தங்கள் கட்சியினர் யாரேனும் தாக்கினார்களா என்று கேள்வி எழுப்பினார். இதன்பின், கதிரின் இல்லத்தாருடன் சில நிமிடங்கள் பேசிய தமிழிசை பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் கூறியதாவது,
தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் என்னை ஒருமுறை தாக்கினர். தமிழிசைக்கு பின்னால் நடந்த சம்பவம் என்பதால் தாக்கப்பட்டது அவருக்கு தெரியாது. பாஜகவினர் தாக்கியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக நேரில் சந்தித்த தமிழிசை கூறினார். நான் மது அருந்தி விட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு. பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருப்பதால்தான் அது பற்றி கேள்வி கேட்க சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.