தலைக் கவசம் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட அது குறித்துக் கவலைப்படாத சென்னை வாகன ஓட்டிகள்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட அது குறித்துக் கவலைப்படாத சென்னை வாகன ஓட்டிகள்.


இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் அண்மைக்காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
தலைக்கவசம் அணிவதால் கடந்த 2016-இல் 4 ஆயிரத்து 91 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 2017-இல் 2,956-ஆகக் குறைந்துள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
ரூ.13 கோடி அபராதம்: இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கடந்த 2013 ஜூலை முதல் 2018 ஜூலை வரை இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு எதிராக 15 லட்சத்து 16 ஆயிரத்து 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.13 கோடியே 20 லட்சத்து 7 ஆயிரத்து 297 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் , அணியாமல் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கையைப் படித்து பார்த்த உயர்நீதிமன்றம், அதிருப்தி தெரிவித்திருந்தது.
கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்-நீதிபதிகள் உத்தரவு: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவில்லை. அரசு பிறப்பித்துள்ள உத்தரவு காகித அளவில் மட்டுமே உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவும் திருப்தியளிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் கடந்த 2005 முதல் 2014-ஆம் ஆண்டு வரை அறிக்கை வெளியிட்டதைத் தவிர வேறு எந்தவிதமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு 41,300 பேர் பலியாகி உள்ளனர்; 62 ஆயிரத்து 413 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
அக்டோபர் 27-இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: தலைக்கவசம் கட்டாயம் என பிறப்பிக்கப்பட்ட அரசாணை, நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு கண்டிப்புடன் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பின்புறம் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம்தான் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. எனவே. தமிழக அரசு இது தொடர்பாக கடந்த 2007-இல் பிறப்பித்துள்ள அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான அறிக்கையை வரும் அக். 27-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com