காவிரி படுகை மாவட்டங்களில் சாகுபடிக்கான பாசன நீர் பராமரிப்பைக் கண்காணிக்க தமிழக அரசு தனியாக ஐஏஎஸ் அதிகாரி பாலாஜியை நியமித்துள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறையும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த காலங்களில் மேட்டூர் அணை நீர் திறக்கப்படும்போது, இயற்கையாகவே மழையும் தொடர்ந்து பெய்யும். இதனால், பாசன நீர் பிரச்னையாக இருக்காது. தற்போது மேட்டூர் அணை பலமுறை நிரம்பியும் முக்கொம்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பாதிக்கப்பட்டதால், போதிய அளவு தண்ணீரைத் திறக்க முடியவில்லை. தற்போது, அந்த பாலம் சரிசெய்யப்பட்டு 22,800 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது.
பாசன நீர் பராமரிப்பைக் கண்காணித்து, அதன்படி தேவையான தண்ணீரை விட தனியாக ஐஏஎஸ் அதிகாரி பாலாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது. இது காவிரி பாசன வரலாற்றில் முதல் முறையானது. எதிர்காலத்தில் அவரது அறிக்கையின் விவரப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடைமடை பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறையும் என்றார் அமைச்சர்.