தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இப்பேச்சு கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து போலீஸாரும், கருணாஸ் பேச்சு குறித்து விசாரணை செய்து வந்தனர். இதில் கருணாஸ் அந்தப் போராட்டத்தில், அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டதாம்.
இதையடுத்து கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் நடிகர் கருணாஸ் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கலாம் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
8 பிரிவுகளின் கீழ் வழக்கு: இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் கருணாஸ் மீது கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கருணாஸை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதேவேளையில், கருணாஸ் மீது சில அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் தனித்தனியாக புகார் அளித்து வருவதால், அந்தப் புகார்களின் அடிப்படையிலும் வழக்குப் பதிவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.