விசாரணை ஆணையங்களின் காலக்கெடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையங்களின்
விசாரணை ஆணையங்களின் காலக்கெடு: உயர் நீதிமன்றம் உத்தரவு


மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையங்களின் காலக்கெடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையங்களின் காலக்கெடு தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவு:
ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்துக்கு காலக் கெடு: சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு 3 மாதத்துக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ ஆணையத்துக்கு...தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையை முடிப்பதற்கான உரிய கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தலைமைச் செயலகக் கட்டட ஆணையத்துக்கு... புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரகுபதி ராஜிநாமா செய்ததைத் தொடரந்து, அந்த பதவிக்கு வேறு நீதிபதி யாராவது நியமிக்கப்பட உள்ளனரா? புதிய நீதிபதியை நியமிக்க தமிழக அரசு ஏதாவது பரிசீலனை செய்கிறதா? இதுதொடர்பாக தமிழக அரசு வரும் செப்டம்பர் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு என்ன? திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது.
இந்தக் கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 
நீதிபதி ரகுபதி ராஜிநாமா ஏன்? இந்த நிலையில் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த ஆணையத்துக்கு வழங்கப்படும் நிதி மற்றும் இதர செலவினங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஆணையம் மேற்கொண்ட விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் பதவியை நீதிபதி ஆர்.ரகுபதி ராஜிநாமா செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரணை ஆணையங்களின் காலக்கெடு தொடர்பாக அவர் உத்தரவுகளை பிறப்பித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com