பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்: பிரகாஷ் காரத்

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்
சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்  பிரகாஷ் காரத். 
சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்  பிரகாஷ் காரத். 


வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில் கருத்துரிமை-ஜனநாயக உரிமை பாதுகாப்பு' பொதுக்கூட்டம், சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரகாஷ் காரத் பேசியது: இன்றைக்கு மத்திய பாஜக அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும், தமிழக அதிமுக அரசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகின்றன. அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள பேச்சுரிமை, அமைதியாகப் போராடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை என அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
அரசின் மக்கள் விரோத, பெருநிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர்ப்பவர்கள் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (ஊபா) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்கள் 6 மாதம் சிறையிலிருந்து வெளிவர முடியாது. இதுபோலத்தான் இன்றைக்கு சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், திணிக்கப்படும் இந்துத்துவா கொள்கைகளை எதிர்ப்பவர்கள் பசு வதை, மாட்டிறைச்சி உண்டனர் என்று கூறி கொலை செய்யப்படுகின்றனர்.
இந்தச் சம்பவங்களில் கொலையானவர்களுக்கு எதிராகவே போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்கின்றனரே தவிர, கொலை செய்தவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதில்லை. இதே நிலைப்பாட்டைத்தான் தமிழகத்திலும் ஆளும் அதிமுக அரசு கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேலம் -சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராடுபவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
அவசர நிலையைக் காட்டிலும்: இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலையைக் காட்டிலும், மிக மோசமான நிறுவனமயமான அவசர நிலையை நாடு முழுவதும் பாஜக அரசு அமல்படுத்தி வருகிறது. 
அன்றைய அவசர நிலைக்குப் பின்னர் 1977 -இல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி எதைச் சந்தித்தாரோ, அதைத்தான் பாஜக அரசும், அதிமுக அரசும் இன்றைக்கு சந்திக்க உள்ளன. 
இவர்களின் தொடர் அடக்கு முறையையும், ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதையும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கும், அதிமுக அரசுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்றார் அவர்.
இந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com