பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளதன் மூலம் தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள 1.57 கோடி குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு பெற முடியும் என அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
பிரதமரின் ‘ஜன் ஆரோக்யா யோஜனா’, ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இணைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பேசியது:
"இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சமூகப் பொருளாதார ஜாதி வாரியான கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமாா் 2.85 கோடி போ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவையைப் பெறலாம். மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள 1.57 கோடி குடும்பத்தைச் சோ்ந்த பயனாளிகள் ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும்" என்றாா்.