வாக்காளர் பட்டியல் திருத்தம்: பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் மனு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.31 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வரும் அக்டோபர் மாதம் முழுவதும் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
எத்தனை பேர் சேர்ப்பு?: செப்டம்பர் 1 முதல் 23-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு திங்கள்கிழமை வெளியிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (படிவம் 6) மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 933 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 115 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 
பெயர் நீக்கம் செய்ய (படிவம் 7 ) 51 ஆயிரத்து 233 பேர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (படிவம் 8) 89 ஆயிரத்து 194 பேர், முகவரி மாற்றம் செய்ய (படிவம் 8 ஏ) 53 ஆயிரத்து 633 பேர் என விண்ணப்பித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள 6 லட்சத்து 131 ஆயிரத்து 127 பேர் உள்பட மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 பேர் ஞாயிற்றுக்கிழமை (செப்.23) வரை விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 
தொடர்ந்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது என்றும், வரும் அக்டோபர் 7 மற்றும் 14 அன்று சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com