தாமதமின்றி 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 28 ஆண்டு காலமாக சிறையில் அடைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. காலதாமதம் செய்யாமல் அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று, அவர்களை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும்.
திருமுருகன் காந்தியை விடுதலை செய்க: அதே போன்று ஜனநாயக நெறிமுறைகளுக்கும், சட்டத்துக்கும் உள்பட்டு கருத்துகளை கூறி வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் கடுமையான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. உடல் நலன் கருதி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.