உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சுற்றுலா தினமானது சுற்றுலாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க நெற்றியில் சந்தனம், குங்கும திலகமிட்டும், சுற்றுலா தகவல்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேரணி: கன்னியாகுமரி ஸ்ரீமணியா இன்டர்நேஷனல் கேட்டரிங் கல்லூரி சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனிடையே, உலக சுற்றுலா தினம் தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் அரசு உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் வழங்கினார்.
தஞ்சாவூர் பெரியகோயிலில்: இதேபோன்று, தஞ்சாவூர் பெரியகோயிலில் சுற்றுலாத் துறை சார்பில் உலகச் சுற்றுலா தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்குச் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிடப்பட்டது.
சிவாஜிராவ் கலைக்குழுவினரின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இணைந்து சில வெளிநாட்டுப் பயணிகளும் கரகாட்டம் ஆடினர்.