தேனி மாவட்டம் சுருளி அருவியில் வியாழக்கிழமை மாலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வெப்பச்சலனம் காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள மணலார் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுருளி அருவியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வெள்ளிக்கிழமை அருவியில் வரும் நீர்வரத்தை பொறுத்தே, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.