மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1

ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது.

மூலக்கொல்லை பெருவிழா

மூலக்கொல்லை முதல் ஓவியம் உள்ள இடத்திலிருந்து ஏறத்தாழ அரை கிலோ மீட்டர் தொலைவில், மூலக்கொல்லை ஓவியம் இரண்டு என்ற சாமியாடிகளின் ஓவியப் புதையல் உள்ள இடம் அமைந்துள்ளது. இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட இடத்தை அடைந்ததும், ஒரு பெரிய கல்திட்டைக்குள் நுழைகின்றோமோ என்ற எண்ணம் உருவானது. அது இயற்கையான அமைப்பு. அறை போன்ற இடைவெளியைத் தரும் வகையில், இரு பக்கத்தில் அமைந்த கல்குண்டுகளுக்கு மேல் ஒரு மிகப்பெரிய கல்குண்டு மூடுகல் போல் அமைந்துள்ளது. முன்புறம் ஒரு கல்குண்டு உள்ளது. பக்கக் கல்குண்டுக்கும் முன் கல்குண்டுக்கும் இடையேயுள்ள சிறு இடைவெளி அறை பகுதிக்குச் செல்ல உதவுகின்றது. அறை பகுதியில் இருந்து பின்பக்கம் செல்லவும் குறுகிய இடைவெளி உள்ளது. ஓவியங்கள் அறையின் கீழ்ப்புற உள், வெளிப்பக்கங்களிலும், முகப்பிலும், பின்பகுதியிலும், மேற்குப்புற வெளிப்பக்கத்திலும் தீட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களை எட்டு தொகுப்பாகப் பிரித்துக் காணமுடிகின்றது.

ஓவியம் தீட்டும் வண்ணத்தைக் குழைக்க பாறையில் செதுக்கிய கிண்ணம் போன்ற சிறுகுழியையும், குழியில் வெள்ளை வண்ணம் ஆடைபோல் படிந்திருந்ததையும் காணமுடிந்தது. புதிய கற்கால மக்கள் ஓவியத்தின் வண்ணத்தைக் குழைக்க பாறையில் ஒரு குழியை உருவாக்கிப் பயன்படுத்தியதற்கான சான்றை முதன்முதலில் இங்குதான் காணமுடிகிறது.

பின்பிறமுள்ள ஓவியக் காட்சிகளை முதல் இரண்டு தொகுப்புகளாகப் பகுத்துக்கொள்ள முடிகிறது. முதல் தொகுப்பு வெளிப்படுத்தும் பொருளின் அடிப்படையில் “மூலக்கொல்லை பெருவிழா” என இங்கு அழைக்கப்படுகிறது. இரண்டாவது தொகுப்பை “குலக்குறி வழிபாடு” எனவும் காணமுடிகிறது. முதல் தொகுப்பான பெருவிழா இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

முதல் தொகுப்பு: பெருவிழா ஓவியம்

முதல் தொகுப்பு – பெருவிழா முழு காட்சி

முதல் தொகுப்பு – பெருவிழா முழு காட்சி - மற்றொரு கோணம்

மூலக்கொல்லைப் பெருவிழா என்று இங்கு பெயரிடப்பட்டுள்ள முதல் தொகுப்பு முழுவதும் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. ஓவியத்தைத் தீட்ட பாறை சீர்க்கப்பட்ட தன்மையும், இயற்கையாகப் பாறையின் மேற்பரப்பில் உருவான பள்ளமான பகுதியை கடலாக உருவகித்து, அதில் முதலை, திமிங்கிலம் போன்ற நீர்வாழ் விலங்குகளைச் சித்தரித்துள்ள விதமும் கவனத்தை ஈர்க்கும்படியாக உள்ளது. இப்பள்ளத்தில் பாசி படர்ந்து கருமையடைந்து அதன் நீர்நிலைத் தன்மையின் வசீகரத்தைக் கூட்டியுள்ளது. மாமல்லபுரத்தில் பல்லவர் சிற்பக்கலையின் உன்னதத்தையும், சிற்பியின் கற்பனை வளத்துக்கும் எடுத்துக்காட்டாக அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுப்பு உள்ளது. இச்சிற்பத் தொகுதியில், பாறையில் இயற்கையாக அமைத்த பிளவை, கங்கைப் பேராறு எனக்கொண்டு பிற காட்சிகளை அதன் இருபுறமும் வடித்த கலைநுட்பத்தையும் சிற்பியின் மதிநுட்பத்தையும் வியப்பர். மாமல்லபுரப் படைப்பு பொ.ஆ.7-8-ம் நூற்றாண்டு ஆகும். ஆனால், மூலக்கொல்லை படைப்போ மு.பொ.ஆ.3000 ஆகும். எனில், மாமல்லபுரப் படைப்புக்கு 3800 - 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கையாக உருவாகியிருந்த ஒரு பள்ளத்தை ஒரு கடலாக – நெய்தல் இடமாகக் காட்சிப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அக்காலக் கலைஞனின் கற்பனைத்திறன் வியக்கவைக்கிறது. மாமல்லபுரத்துக் கலைஞனுக்கு மூலக்கொல்லை கலைஞன் முன்னோடியாக விளங்குகிறான்.

மூலக்கொல்லை பெருவிழா ஓவியத் தொகுப்பில் ஆங்காங்கே சில பகுதிகள் மங்கலாகி சிதைவுக்குள்ளாகி உள்ளன. முக்கியமான பெரும் பகுதி தெள்ளத் தெளிவாக உள்ளது நற்பேறே. இந்த ஓவியத் தொகுப்பானது, விழாவின் பொழுது மேற்கொள்ளும் நடனக் காட்சியை மையப்படுத்தியது என்றாலும், நாம் இன்றுவரை பாறை ஓவியங்களில் அறிந்த விழா, நடனக் காட்சி ஆகியவற்றின் குணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நமக்குப் புதிய செய்திகளை வழங்கிறது. நாம் இதுவரை அறிந்த நடனக் காட்சிகள் வேட்டையை நிகழ்த்திக் காட்டும் மந்திரச் செயலாகவோ, அல்லது படையல் செய்து அல்லது ஒரு திருவுருவை நிறுத்தி ஊர் கூடி கொண்டாடிய நிகழ்வாகவோ இருந்திருக்கிறது.

ஆனால், மூலக்கொல்லையின் அடிப்படை வேறுபாடு, இது சாமியாடிகளின் செயல்களை வெளிப்படுத்துவது என்பதில் உள்ளது. தவிரவும், வாழிடத்தையும், அறிந்த விலங்குகளையும், சுற்றுச்சூழலையும், தம்மக்களின் குணநலன்களையும், ஆண்-பெண் பாலினத்தையும் வெளிப்படுத்தும் பாங்கிலும், அவற்றின் துல்லியத்திலும் உள்ளது. இதில் வேட்டைக் காட்சியோ, தலைமைப் பண்பை முன்னிறுத்தும் அல்லது வீரத்தை முன்னிருத்தும் மனிதத் சித்தரிப்போ ஏதுமில்லை. வீரம் அல்லது தலைமைப் பண்பு ஆகிய பெருங் கற்படைப் பண்பாட்டுக் கால ஓவியங்கள் வெளிப்படுத்தும் குணங்களை இவை வெளிப்படுத்தவில்லை. அதனாலேயே, மூலக்கொல்லை ஓவியங்கள் புதிய கற்காலப் படைப்பு என காலத்தைத் தீர்மானிக்க வைக்கிறது. இதில் மனித உருவங்களும், மீவியல்பு மனித உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மீவியல்பு மனித உருவங்கள், சாமியாடிகளாகவும் அவர்களின் செயல்களையும் காட்சிப்படுத்துகின்றன. இங்கு ஊர் கூடி பெருவிழா காண்பது ஊர் வளமையைச் சார்ந்தாக உள்ளது. இதனையொட்டி, சாமியாடிகள் ஊர் நன்மைக்காக எடுக்கப்படும் விழாவுக்கு நல்லாசியை வழங்க மூதாதையர் ஆவியை அழைக்கும் நிகழ்வானது ஒரு பகுதியாகவும், ஊர் கூடி வழிபடுவது, நடனமாடிக் கொண்டாவது போன்ற நிகழ்வுகள் மற்றொரு பகுதியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சி விளக்கம்

இந்த ஓவியத் தொகுப்பில் உள்ள புனித இடம் என்று குறியீடாக்கப்படும் கோலத்தினை மையப்புள்ளியாகக் கொண்டு மேல் கீழ் பக்கவாட்டுக் காட்சிகள் என அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

கோலத்தை மையமாகக் கொண்ட காட்சிகள்

கோலத்துக்கு மேல் பகுதி காட்சிகள், மூதாதையரை அழைக்கும் சாமியாடிகளின் செயலை மையப்படுத்தியுள்ளது. கோலத்துக்கு முதல் சுற்றுவரிசையாக நின்ற நிலையில் நான்கு மயில் உருவங்கள், ஒரு மீவியல்பு மனித உருவம், கிடந்தகோலத்தில் அல்லது மெய்மறந்து வீழ்ந்திருக்கும் ஒரு மீவியல்பு மனித உருவம் ஆகியவை உள்ளன. இவ்விரு மீவியல்பு மனித உருவங்களும் ஒரே சாமியாடியின் உருவங்கள் ஆகும். நின்ற நிலையில் உள்ள சாமியாடி, தன் மூதாதையரைத் தேடிய பயணத்தில் பரவசமடைந்து மெய்மறந்து வீழ்ந்திருக்கிறார். அவர் மூதாதையரைத் தேடி வேற்றுலத்துக்குப் பயணிக்கிறார் என்பதைச் சுட்ட ஒரு கோடும், அவர் மயில் உருவில் மூதாதையர் உலகம் நோக்கிப் பயணிக்கிறார் என்பதைச் சுட்ட ஒரு மயில் பறப்பதும் காட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஒரு பெரிய ஒட்டகம் காட்டப்பட்டுள்ளது. பறக்கும் மயிலுக்கும் ஒட்டகத்துக்கும் இடையில் மற்றொரு கோடு காட்டப்பட்டுள்ளது, இக்கோடு மயிலாகப் பறந்து செல்லும் சாமியாடி, ஒட்டக வடிவில் தம் மூதாதையரை அழைத்துவரும் பயணத்தைத் தொடர்கிறார் என்பதை விளக்குகிறது.

இங்கு தமிழ்நாட்டு விலங்கு இல்லாத ஒட்டகம் காட்சிப்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். இதற்கான விடையை பின்னர் காண்போம். ஒட்டகத்துக்கு அடுத்து ஒரு மீவியல்பு மனித உருவம் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளது. இதன் முகம் பறவை முகம் பூண்டுள்ளது; இரு கைகளும், மேலே உயர்த்தி வேண்டுதலை நிகழ்த்துவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இவ்மீவியல்பு மனித உரு ஒரு பெண் என்பதைச் சுட்ட, தொடைகளுக்கு இடையே ஒரு சிறுபுள்ளி வைத்து பெண்குறி காட்டப்பட்டுள்ளது. எனில், இப்பெண் மீவியல்பு மனித உருவே, அழைக்கப்பட்ட மூதாதை ஆகலாம். எனில், இக்காட்சி மையப்படுத்துவது மயிலைக் குலக்குறியாகக் கொண்ட குழுவினர், தம் மூதாதையரான பெண்ணை தங்கள் குழுவின் நன்மைக்காக எடுக்கும் விழாவுக்கு அழைத்து வருகின்றனர். இவ்வழைப்புக்கு சாமியாடிகள் ஒட்டக வடிவில் பயணிக்கின்றனர். இந்த வகையில், இவ்வோவியத் தொகுப்பை மூதாதையர் வழிபாடாகக் காண இடமுள்ளது.

மேல் காட்சி

மேலே விவரிக்கப்பட்ட காட்சிக்கு மேலாக, பறவை முகம் கொண்ட மீவியல்பு மனித உருவம் ஒன்று மையமாக உள்ள சூரியனை நோக்கி விரைவதாகக் காட்டப்பட்டுள்ளது. மங்கிச் சிதைந்துள்ள இம்மையக் காட்சியானது, வட்டத்தில் இருந்து வெளிக்கிளம்பும் கதிர்கள் கொண்டதாக ஊகிக்கமுடிவதால் இது சூரியன் ஆகலாம். இதனால் இது நேரடியாக சூரிய வழிபாட்டைக் குறிக்கின்றது என்பதைவிட, சூரியன் மூதாதையர் வசிக்குமிடம் என்ற தொல்மனிதர்களின் நம்பிக்கையினைக் காட்டுகிறது எனலாம். இந்த இடத்திலும் வேற்றுலகப் பயணத்தைக் குறிக்கும் கோடு காட்டப்பட்டுள்ளது. ஆக சூரியலோகத்தில் உள்ள தம் மூதாதையை ஊர் நன்மை பொருட்டு எடுக்கப்பட்ட விழாவுக்கு சாமியாடிகள் அழைத்துவருகின்றனர் என்பதை இக்காட்சிகள் விளக்குகின்றன. கோட்டுக்குக் கீழ் ஒரு முதலை அருகில் உள்ள நீர்நிலையில் இருந்து (கடல்) மேலேறி ஊர்ந்து வருவதும் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து கடல் காட்சி பகுதியில் விளக்கப்படும்.

கடல் (நீர்நிலைக்) காட்சி

கடல் காட்சி

மேலே விவரிக்கப்பட்ட காட்சிக்கு இடதுபுறம் ஒரு பள்ளமான பகுதி கடலாக உருவகித்து அதில் நீர்வாழ் உயிரினங்களான முதலை, திமிங்கிலம் ஆகியவை நீந்துவது போலவும், கறைக்கு அருகில் ஒதுங்கியிருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கரைப் பகுதியில் தலையை மடக்கிப் படுத்திருக்கும் ஒரு பாம்பு காட்டப்பட்டுள்ளது. மேலே விளக்கிய முதலை நீரிலிருந்து மேலேறி ஊர்ந்து வருவதுபோலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சாமியாடிகள் தங்கள் மூதாதையரைத் தேடிய பயணத்தில், தாங்கள் விரும்பி நினைத்த விலங்கு உருவத்தை அடைந்து அதுவாகவே செல்கின்றனர் என்பதைக் காட்டுவதாகும். (சாமியாடிகள் விலங்கு உருவில் பயணிக்கும் செயல் குறித்து முடிவுரைப் பகுதியில் விளக்கப்படும்).

இக்காட்சியிலிருந்து, மூலக்கொல்லை மக்கள் கடல் சார்ந்த நெய்தல் வாழ்வியலையும், நெய்தல் நில விலங்குகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.

பக்கக் காட்சி

இடது பக்கக் காட்சி

கோலத்துக்கு இடதுபுறத்தில் இரண்டாம் வரிசையாக கடலில் இருந்து வெளிவந்து நிலத்தில் படுத்திருக்கும் ஒரு திமிங்கிலம் மற்றும் மான் அல்லது ஆடு காட்டப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதியில் மண்படிவு படிந்துள்ளதால், மேற்கண்ட விலங்குகளில் ஏதோ ஒன்றாக யூகிக்கவேண்டி உள்ளது. மானாக எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதற்கு அடுத்து பறவை முகம் பூண்ட மனித உருவம் ஒன்று உள்ளது. இம்மனித உருவம், ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கோடயமும் ஏந்தியுள்ளதாகவும், இடையில் வாளின் உறையும் காட்டப்பட்டுள்ளதாகவும் மேலோட்டமான பார்வைக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்த உருவத்தை நுணுக்கமாக ஆராயவேண்டி உள்ளது. பறவை முகம் பூண்ட இந்த மனித உருவம் எதிர் திசையினைப் பார்க்கிறது. கால் அசைவுகளின் திசையும் எதிர்திசைப் போக்கைக் காட்டுவதாக இருந்தாலும், உடலசைவுகள் இவ்வுருவத்தின் வேறு செயலான நாட்டியத்தை அடையாளப்படுத்துகின்றது.

பொதுவாக, வீரன் முன்னோகி விரையும்பொழுது இடுப்பில் கட்டிய வாளுறை முன்பக்கம் நீட்டிய நிலையில் வராது என்பது கொண்டும், காலசைவுகளின் போக்கைக் கொண்டும் இதன் உண்மைப் பொருளைத் தேடலாம். இவ்வுருவக் காட்சியை ஒரு சாமியாடி பறை இசைக் கருவியை ஒரு கையிலும், அதனை இசைக்கும் கோலை மற்றொரு கையிலும் ஏந்தி, அதனை வீராவேசத்துடன் இசைத்து ஆடுகிறார். ஆடுவதன் காரணமாகவே எதிர் திசையினை நோக்கும் கால் முன்னோக்கி சாய்ந்துள்ளது, ஆடுவதால், இடையில் கட்டிய பொருளும் முன்னோக்கி இருக்கிறது. அதே சமயத்தில், மற்றொரு கால் தரையில் உறுதியாக ஊன்றியுள்ளது. இதன் காலுக்குக் கீழ் ஒரு கோடு காட்டப்பட்டுள்ளது. இது, ஒரு கால் தரையிலும், மற்றொரு கால் அந்தரத்திலும் இருப்பதைக் காட்ட இடப்பட்டுள்ளது. இவ்வுருவத்தை பறையிசையை எழுப்பியபடி ஆடும் சாமியாடி அல்லது உதவிச் சாமியாடியாக எடுத்துக்கொள்ளலாம். இச்சாமியாடி ஏன் குழுமியிருக்கும் கூட்டத்தினரைப் பார்த்து இசைத்து ஆடவில்லை என்ற கேள்வி எழலாம். இப்பறையிசை, குழுவின் மகிழ்ச்சிக்காக இசைக்கப்படுவதல்ல; இசையின் லயத்தில் சாமியாடிகளையும் மக்களையும் மெய்மறக்கச் செய்வதாகும். மெய்மறந்து இருக்கும் நிலையில் திசை பற்றிய பிரக்ஞை பொதுவில் எழுவதில்லை. மூவுலகப் பயணத்தின்பொழுது, மெய்மறந்து சாவு நிலையில் இருக்கும் சாமியாடிகளின் உருவங்கள் ஒரு குறிப்பிட்ட திசை என்றில்லாமல் எல்லா திசையிலும் காட்டப்படும் இயல்பை இதனுடன் ஒப்பிட்டுத் தெளியலாம்.

முன்புறக் காட்சிகள்

முன்புறக் காட்சி

முன்புறக் காட்சியில் நான்கு மலை முகடுகள் புள்ளியிட்டு சுற்றிக்காட்டப்பட்டுள்ளன. இது, இம்மக்களின் வாழிடத்தை அல்லது இம்மக்கள் குறிஞ்சி நிலப் பண்பாட்டை உடையவர்கள் என்பதைக் குறிப்பதாகும். இதற்கு முன்புறமாக மூன்று பனை மரங்கள் மிக நேர்த்தியாக தீட்டப்பட்டுள்ளன. முதலிரண்டு பனை மரங்களுக்கு இடையில் ஒரு மயில் காட்டப்பட்டுள்ளது. பனை மரத்துக்குப் பிறகு மூன்று வரிசையில் மீவியல்பு மனித உருவங்களும், மனித உருவங்களும், விலங்கு உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடுவரிசையில் ஐந்து மனித உருவங்கள் நின்ற நிலையில் கைகோர்த்து நடனமாடும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஐந்து உருவங்களின் தலையும் வட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. பாறைக்கலையில் இவ்வகை வட்டத்தலைச் சித்தரிப்புக் கொண்டவை, காட்சி உருவத்துக்குத் தக்கவகையில் “காளான் தலை மனிதர்கள் அல்லது காளான் தலை மீவியல்பு மனித உருவங்கள்” என்று அழைக்கப்படும். இவற்றுள் இரண்டாவது உருவம் அளவில் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஐந்து காளான் தலை மனித உருவங்களும் பெண்கள் என்று காட்ட, உடலில் நளினமான வளைவுகளும் புட்டங்கள் பருத்தும் காட்டப்பட்டுள்ளன. பருத்த புட்டங்கள் தாய்மையின் அடையாளமாகத் தொல்லோவியங்களிலும் சிற்பங்களிலும் காட்டப்படும் மரபை நினைவுகொள்ளலாம். நடனமாடும் இவ்வுருவங்களின் கால் அசைவுகள் குழு நாட்டியத்தின் அடிப்படை விதியான ஒரு திசையில் இல்லாமல் உள்ளன. இது போதையூட்டும் கள்ளை உண்டு பரவசத்துடன் ஆடும்பொழுது, ஒவ்வொருவரும் பிறரது அசைவுகளுக்கு இணையாமல் தன்னிச்சையாக ஆடும் யதார்த்தநிலையைக் காட்டுவதாகும். காளான் தலை மெய்மறந்த நிலைக்கு ஆட்பட்டதின் குறியீடே என தொல்லோவிய வல்லுநர்கள் குறிப்பர். நான்காவது உருவம், தலையில் விழாக்கால அலங்காரத் தலைப்பாகையைக் கொண்டிருக்கிறது. ஆறாவதாக ஒரு மீவியல்பு மனித உருவம் அளவில் பெரியதாக இடம்பெற்றுள்ளது. இவ்வுருவம் பெண் என்பதைச் சுட்ட, தொடைகளுக்கு இடையில் ஒரு புள்ளிவைத்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவம் இரு கைகளையும் மேலே உயர்த்தி வணங்கும் கோலத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேல் வரிசையில் இரண்டு மீவியல்பு மனித உருவங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் உருவம் இரு கரங்களையும் மேலே உயர்த்தி வணங்கும் கோலத்திலும், மற்றொரு உருவம் தலையில் முட்கள் கொண்ட தலைப்பாகை அணிந்து, இரு கைகளையும் விரைப்பாகக் கீழே தொங்கவிட்டும், கால்களை அகல விரித்தும் வைத்துள்ள நிலையிலும் காட்டப்படுள்ளது. கால்கள் சித்தரிக்கும் அமைப்பைக் கொண்டு இது நடனமாடும் உருவம் ஆகும். இவ்வுருவம் ஆண் என்பதனைக் காட்ட, தொடைகளுக்கு இடையில் ஆண்குறி காட்டப்பட்டுள்ளது. இவ்விரு உருவங்களும் சாமியாடிகளே.

கீழ் வரிசையில் ஒரு மீவியல்பு மனித உருவம் இரு கரங்களையும் மேலுயர்த்தி மெய்மறந்து வணங்கும் நிலையில் காட்டப்படுள்ளது. அதே உருவம் கீழே மெய்மறந்து வீழ்ந்திருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. நின்ற நிலைக்கும் வீழ்ந்திருக்கும் நிலைக்கும் இடையில் ஒரு கோடு காட்டப்பட்டுள்ளது. இது மீவியல்பு மனித உருவத்தில் உள்ள சாமியாடி தன் வேண்டுதலுக்குப் பிறகு வேற்றுலகப் பயணத்தில் உள்ளார் என்பதைக் குறிக்கிறது. அருகில், முதுகின் மீது நான்கு புள்ளிவைத்து சிறப்பித்துக் காட்டப்பட்ட புலியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்புறமாக மற்றொரு விலங்கு ஒன்றின் உருவம் காட்டப்பட்டுள்ளது, இவ்விலங்கை இன்னதென்று அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மானாக இருக்கலாம்.

புலியும் நடனமாடும் உருவங்களின் வேறுவேறான கால் அசைவுகளும்

தமிழரின் ஐந்திணைப் பண்பாட்டுக்கு முன்னோடியா மூலக்கொல்லை பெருவிழா ஓவியம்?

இவ்வோவியத் தொகுப்பின் காட்சிகளை ஒவ்வொன்றாக உட்செறிந்து கொள்ளும்பொழுது, ‘‘தமிழரின் ஐந்திணைப் பண்பாட்டுக்கு முன்னோடியா மூலக்கொல்லை பெருவிழா ஓவியம்” என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. முதலை, மலை முகடு, புலி ஆகியவை குறிஞ்சியையும், மான் முல்லையையும் குறித்து நிற்பதாகக் காணலாம். பனை, வறட்சியைத் தாங்கி வளரும் தாவரம் என்பதால், குறிஞ்சி-முல்லைத் திரிநிலன்களுக்கு உரியதாகப் பொருத்திக் காண்பர். ஆனால், தமிழகத்தில் அனைத்து நிலங்களிலும் வளரும் புல், பனையாகும். எனில், இங்கு பனை மருதத்தோடும் தொடர்புடையதாக்கலாம். திமிங்கிலம் போன்றவை நெய்தலையும், ஒட்டகம் பாலையையும் குறிப்பதாகும். எனில், ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது எனலாம். அவர்களும் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டனர் என்பதனையே இவ்விலங்குகள் தெரிவிக்கின்றன. மற்றொருவகையில், பனைப் பொருள்களால் பொருளாதார ரீதியான வளர்ச்சியினை மூலக்கொல்லை மக்கள் பெற்றிருந்தனர் என்பதையும் இது வெளிச்சமாகிறது. பனைப் பொருட்களின் வணிகத்தின் பொருட்டும் இம் மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஐவகை நிலத்திலும் பரவித் தங்கினர் என்பதையும் இக்காட்சிகள் தெரியப்படுத்துகின்றன.

தகடூர்ப் பகுதியும் பனையும்

தகடூர்ப் பகுதிக்கும் பனை மரங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சங்க இலக்கியத்தில் அதியமான் மரபினர் பனம்பூ மாலையைச் சூட்டியவர் என்ற புகழைப் பெற்றிருப்பவர்கள். அதியர் மரபினர் குறித்த சங்க இலக்கியக் காட்சிகளுக்கு இது கூடுதல் வலு சேர்க்கும் சான்று. மேய்த்தல் தொழில் புரிந்த அதியமான்கள் மருதப் பண்பாட்டுக்கு உரிய கரும்பைப் பயிரிட்டனர் என்பது சங்க கால ஒளவையாரின் கூற்றாகும்.

ஓவியச் செய்தி

மூலக்கொல்லை ஓவியமானது ஊர் நன்மைக்காக எடுக்கப்பட்ட பெருவிழாவினையும், அதனை ஒட்டிய மூலக்கொல்லை மக்களின் சாமியாடிகளின் செயல்களையும் வெளிப்படுத்துகிறது. ஊர் விழாவுக்கு, சாமியாடிகள் தம் மூதாதையரை அழைக்க மூதாதையர் உலகுக்குச் – சூரியலோகம் - செல்கின்றனர். பனை மரத்தின் வளத்தினால் செழிப்புற்ற மூலக்கொல்லை மக்கள் அல்லது இவர்களின் கிளைக் குடியினர், ஐந்திணை வாழ் மக்களாகக் பரவி வாழ்ந்துள்ளனர். அவர்களும் விழாவுக்கு அழைக்கப்படுகின்றனர். இதன் பொருட்டான பயணத்தின்பொழுது, சாமியாடிகள் அவ்வவ் நிலத்தின் வலிமையான விலங்குகளான ஒட்டம், புலி, முதலை, பாம்பு, மான் ஆகியவற்றில் தம் ஆவியை புகுத்தி, அல்லது உருமாறி பயணிக்கின்றனர். மக்கள் விழா நடனத்தை நடத்தி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

*

கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com