இணையதளம் வாயிலான சுற்றுலா நுழைவுஇசைவு (இ-விசா) நடைமுறை திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டை தொடர்ந்து அத்திட்டம் மேலும் 37 நாடுகளுக்கு இன்று (பிப்.26) முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அல்பேனியா, ஆஸ்திரியா, செக் குடியரசு, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, காம்ரோஸ், குரோஷியா, டென்மார்க், காம்பியா, கானா, கிரீஸ், ஐஸ்லாந்து, லைபீரியா, செர்பியா, மடகாஸ்கர், ருமேனியா, செனகல், தென் ஆப்பிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, தஜிகிஸ்தான், ஜாம்பியா, ஜிம்பாவே உள்ளிட்ட 37 நாடுகளுக்கு இ-நுழைவுஇசைவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, இத்திட்டத்தால் பயன்பெறும் நாடுகளின் எண்ணிக்கை, 113 என்ற எண்ணிக்கையிலிருந்து 150-ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மின்னஞ்சல் வாயிலாக அனுமதி வழங்கப்படுவது இ-நுழைவு இசைவு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட நுழைவு இசைவு அனுமதி இதன் மூலம் தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 3,500 இ-நுழைவுஇசைவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்ட இ-நுழைவுஇசைவில் பிரிட்டன் நாட்டின் பங்களிப்பு 23.93 சதவீதமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா (16.33%), ரஷ்யா (8.17%), பிரான்ஸ் (7.64%), ஜெர்மனி (5.60%), ஆஸ்திரேலியா (4.82%) உள்ளிட்ட நாடுகள் இருந்தன.