ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 11 வயது மாணவர் அகஸ்தியா ஜெய்ஸ்வால் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹைதராபாதில் உள்ள புனித மேரி ஜுனியர் கல்லூரியில் பயின்ற அந்த மாணவர் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதில், அகஸ்தியா 63 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். தெலங்கானாவில் மிகக்குறைந்த வயதில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றது அகஸ்தியா என்று அவரது தந்தை அஸ்வனி குமார் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மருத்துவராக ஆவதுதான் எனது கனவு என்கிறான் அகஸ்தியா ஜெயிஸ்வால்.
முன்னதாக தனது 9-ஆவது வயதில் அகஸ்தியா 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றார். அப்போது அவர் மாநில கல்வித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.
12-ஆம் வகுப்புத் தேர்வை 11 வயது மாணவர் எழுதியது குறித்து மாநில கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத அவர் தேர்வு செய்த பாடம், முதன்மை மொழி ஆகியவற்றை மட்டுமே தெரிவித்திருந்தார். வயதைக் கூறவில்லை. அந்த மாணவரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.