மும்பை: ரூ.87 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக இலங்கையைச் சேர்ந்த இருவர் மும்பை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இலங்கையைச் சேர்ந்த ஜமீர் வாஹித் (42) மற்றும் அல்தாஃப் ஹமீது ஆகிய இருவர் துபையிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாலை வந்தனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களிடம் தனித்தனியாக நடத்திய சோதனையில் மலக்குடலில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாஹித்திடமிருந்து 1,516 கிராம் எடையுள்ள 13 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.45,48,000.
அதேபோன்று ஹமீதிடமிருந்து 1,399 கிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.41,97,000.
அவர்கள் இருவரும் இலங்கையின் புட்டலம் மாவட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஜவுளி வியாபாரம் தொடர்பாக அடிக்கடி இந்தியா வந்து செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
தங்கம் கடத்திய வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, துபையிலிருந்து சனிக்கிழமை மும்பைக்கு விமானத்தில் வந்த சையது நூருலமீன் (26) என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.