சென்னை தீவுத்திடல் சுற்றுலாத் துறை தொழில் பொருள்காட்சியில் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்து அறநிலையத் துறை சார்பில் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் கண்காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் இந்தப் பிரிவுக்கு வருவோருக்கு நாள்தோறும் பிரசாதமும் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 அரங்குகள்: இந்தப் பொருள்காட்சி கடந்த 27-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 70 நாள்கள் வரையில் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு அரசுத் துறை சார்பாக 25 அரங்குகளும், அரசுத் துறை நிறுவனங்கள் சார்பாக 23 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மத்திய அரசின் ரயில்வே துறை, கர்நாடக அரசு சார்பில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர 60 தனியார் அரங்குகள் 120 பல்வேறு வகையான கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா அரங்கம் கப்பல் வடிவிலும், இவை தவிர ஏலகிரி, கொடிவேரி அருவி, ஒகேனக்கல் அருவி உள்பட 6 சுற்றுலாத் தலங்களின் மாதிரி தோற்றங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இலவச பிரசாதம்: இதில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைப்பில் முன்புறத் தோற்றம் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழகத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், வெளிப்புற பகுதியில் அய்யனார், விநாயகர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் எனப் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் பொதுமக்களுக்கு நாள்தோறும் சுண்டல், கல்கண்டு, பொங்கல், திருநீர், குங்குமம் எனப் பல்வேறு வகையான பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்வம்: இதில் குழந்தைகள், பெரியோரைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடியும் என்பதால், நாள்தோறும் குடும்பம், குடும்பமாக பொருள்காட்சியைக் காண குவிந்து வருகின்றனர்.
மேலும், பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் பொருள்காட்சி வளாகத்தினுள் ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.