காணும் பொங்கலை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனர்.
மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் உள்ள அர்சசுணன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருட்டை பாறை, கலங்கரை விளக்கம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதனச் சிற்பங்களைக் காண தினமும் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், காணும் பொங்கலையொட்டி, திங்கள்கிழமை, சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
குறிப்பாக புராதன கலங்கரை விளக்கம், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளை குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். மக்கள் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது. மாமல்லபுரம் ஏடிஎஸ்பி எட்வர்ட் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேடந்தாங்கலில்...
காணும் பொங்கலையொட்டி, மதுராந்தகத்தை அடுத்துள்ள வேடந்தாங்கல், முதலியார் குப்பம் படகு குழாம் பகுதிகளில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி, முதலியார் குப்பம் மழைதுளி படகு குழாம் உள்ளது. தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் இந்தக் குழாமில், சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக இயந்திரம், துடுப்பு, கயாக் வகையான படகுகள் விடப்பட்டுள்ளன. காணும் பொங்கலையொட்டி, மழைதுளி படகு குழாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்: தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
இங்கு சாம்பல், வெள்ளை நிறம் கொண்ட வக்கா, முக்குளிப்பான், வெள்ளை கொக்கு, சிறிய நீர்காகம், ஊசிவால் வாத்து உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளைக் கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வனத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.