விரைவில் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த் நடித்து வரும் "2.0', "காலா' இரு திரைப்படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்து, இயக்குநர்கள் வெற்றிமாறன், அட்லீ இருவரிடமும் கதை கேட்டுள்ளார். அந்தப் படங்களில் நடிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்.
நவீன கவிஞரான அய்யப்ப மாதவன் இப்போது திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இயக்குநர் லிங்குசாமி எழுதிய ஹைக்கூ கவிதைகளால் ஈர்க்கப்பட்டு "லிங்கு ஹைக்கூ' என்ற விளக்க நூலை எழுதியிருக்கிறார்.
மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் நினைவு தினத்தையொட்டி சிறுகதைத் தொகுப்பிற்கான தேர்வை நடத்தி எழுத்தாளர்கள் நரேன், கார்த்திக் பாலசுப்பிரமணியன், ரமா சுரேஷ் ஆகியோருக்கு தலா 10,000 ரூபாய் பரிசளித்திருக்கிறார்கள்.
பாலுமகேந்திரா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை அவரது சீடர் வெற்றிமாறனிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களை வைத்து நூலகம் ஒன்றை நிறுவலாம் என்று இயக்குநரின் மகன் ஷங்கி மகேந்திராதிட்டமிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம் தமிழின் அனைத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளார். தேவைப்படுகிறவர்கள் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறார்.