விதைத்தது விதை...முளைத்தது மரம்!

பள்ளி சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
விதைத்தது விதை...முளைத்தது மரம்!

பள்ளி சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது. அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.
 ஐந்து மாணவிகளும் ஸெஸ் எனப்படும் புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில் விதைத்தனர். தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர். மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர். இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.
 இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி ஆகியவற்றை அளித்தனர். 12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர். சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.
 வைஃபை கருவி உள்ள அறையில் வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள் வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன.
 இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், "இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.ஆய்வின் முடிவுகள் மிகவும் துல்லியமாக வெளிவந்துள்ளன. ùஸஸ் புல் வகையை ஆராய்ச்சிக்குத் தேர்வு செய்ததும் மிகவும் புத்திசாலித்தனமானது. இந்த ஆய்வை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல இருக்கிறேன்'' என்றார்.
 தங்களின் ஆய்வு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது சிறுமிகளை திக்குமுக்காடச் செய்துள்ளது. "பல்வேறு தரப்பிலும் இருந்து வரும் ஆதரவு எங்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது'' என்கின்றனர்.
 "எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது. இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
 தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
 வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள். தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.
 சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!
 -ஜெனி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com