அந்த ஆசிரமத்தில் நடந்த பிரசங்கத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, அனைத்து பக்தர்களின் கைகளிலும் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, அதில் அவர்கள் பெயரை எழுதச் சொன்னார் சாமியார். எல்லாரும் தங்கள் பெயரை பழத்தின் மேல் எழுதி முடித்தவுடன், அதை பக்கத்து அறையில் வைக்கச் சொன்னார். மீண்டும் பிரசங்கத்தை முடித்த சாமியார், "இப்போது உங்கள் பெயர் எழுதிய மாம்பழத்தைச் சரியாக அந்த அறைக்குள்ளிருந்து உடனே எடுத்து வாருங்கள்'' என்று அறிவித்தார். அனைவரும் அடித்துப் பிடித்து அந்த அறைக்குள் நுழைந்து தேடினார்கள். ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளி, கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பழம் கிடைக்காமல் தவித்தனர். சாமியார் உள்ளே வந்து, "ஒவ்வொருவரும் ஒரு பழம் மட்டும் எடுங்கள். அந்தப் பழத்தில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அதை அந்தப் பெயருக்குரியவரிடம் கொடுங்கள்'' என்றார். எல்லாருக்கும் பழம் உடனே கிடைத்துவிட்டது.
இப்போது சாமியார் சொன்னார்:
"இதுதான் வாழ்க்கை. எல்லாரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்குமெனத் தெரியாமலேயே தேடுகிறோம். அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் நமது மகிழ்ச்சி உள்ளது. பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தானே தேடிவரும்'' என்றார்.
அ.யாழினி பர்வதம், சென்னை-78