• குஜராத் மாநிலத்தில் தீபாவளித் திருநாள் குஜராத்தி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த விழாவை அவர்கள் 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
• முதல்நாள் பண்டிகைக்கு "தன்கோஸ்' எனப் பெயர். அன்று கடைகளை சுத்தம் செய்து பூஜைக்குத் தயார் செய்வார்கள். தங்க மற்றும் வெள்ளி நாணயங்களுடன் லட்சுமி பூஜை நடத்தப்படும்.
• இரண்டாவது நாளை "காளிசவுதாஸ்' எனச் சொல்வார்கள். அன்று எதுவும் சாப்பிடாமல் நோன்பிருப்பது வழக்கம். செல்வம், கல்வி, ஆரோக்கியம் கிடைக்க விசேஷ பூஜை செய்யப்படும்.
• மூன்றாம் நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அன்று விருந்தும் விசேஷமாகவும் இருக்கும். புதுக்கணக்கு துவங்கும் வியாபாரிகள் பட்டாசு வெடிப்பார்கள். ஆனால், தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இல்லை. கணேசருக்கு பூஜை நடத்தப்படும். தொடர்ந்து லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வார்கள்.
• நான்காம் நாள் புத்தாண்டுப் பிறப்பு. அன்றுதான் தான தர்மங்கள் செய்வார்கள். நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாக வருடப்பிறப்பு அமைகிறது. அன்று வாடிக்கையாளர்களிடம் சிறு தொகையாவது பெறுவதை மரியாதையாகக் கருதுகிறார்கள்.
• ஐந்தாம் நாள் "பாய்பீச்' எனப்படும். இந்நாளில் சகோதர சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்று அன்பைப் பரிமாறிக் கொள்வர். இந்நாளில் இனிப்பு சாப்பிடுவது விசேஷம். அத்துடன் சிறிது உப்பையும் சாப்பிடுவார்கள்.
எல்.நஞ்சன், முக்கிமலை.
• காளிதேவியை வழிபடும் வங்கதேச மக்களுக்கு வியாழக்கிழமைதான் புனிதமான நாள். அன்று பணத்தைப் பெற்றுக் கொள்வார்களேயன்றி, கொடுக்கமாட்டார்கள். பூஜை நேரத்தில் சங்கு ஊதும் பழக்கம் உண்டு. பெண்களே சங்கு ஊத வேண்டும்.
பே.சண்முகம், செங்கோட்டை.