மூலிகைகளால் குணப்படுத்த முடியாத நோயே இல்லை!

இன்று பரவலாக எல்லாராலும் பேசப்படும் ஒரு வார்த்தை டெங்கு. இந்த டெங்கு வருவதற்கு எல்லாரும் சொல்லும் காரணம் கொசு.
மூலிகைகளால் குணப்படுத்த முடியாத நோயே இல்லை!

இன்று பரவலாக எல்லாராலும் பேசப்படும் ஒரு வார்த்தை டெங்கு. இந்த டெங்கு வருவதற்கு எல்லாரும் சொல்லும் காரணம் கொசு. சுகாதார முறையில் வாழ்வதற்கு நம் எல்லாரையும் அரசு கேட்டுக் கொள்கிறது. அது சரி வந்துவிட்ட ஒரு நோய்க்கு என்ன செய்வது? ஆங்கில மருந்தில் அதைச் சரி செய்ய முடியுமா? தமிழில் நம்மிடம் உள்ள மருந்துகளினால் குணமாக்க முடியுமா? இந்த நோய் வந்துவிடுமோ என்று பயந்து பலரும் தலை முதல் கால்வரை தங்களையும் தங்களது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள துணியால் போர்த்திக் கொண்டு வாழ்கிறார்கள்.

நாம் இன்று உட்கொள்ளும் ஆங்கில மருந்து குழாய்கள் (capsules) ஜீரணமாக ஒரு நாள் ஆனாலும் ஆகலாம். அதனால் நமது மூலிகைகள் மூலம் உருவாக்கப் படும் கேப்ஸுல்ஸ் நான்கு மணிநேரத்தில் நாம் உடலில் கரைந்து, கலந்து விடும். இந்த கேப்சூல்ஸை ஆர்கானிக் காய்கறிகளின் தோல் இழைகளால் தயாரிக்கிறார் வேளாண் விஞ்ஞானி பி.ஆறுமுகம். அவர் இந்த டெங்கு காய்ச்சல் நம்மை விட்டு போக்க வழி வகை சொல்கிறார் :

"நமது மரம், செடி கொடிகளில் இருக்கும் மருத்துவ குணம் இன்று உலகத்தில் வேறு எதிலும் இல்லை. உலகத்தில் உள்ள எந்த நோயையும் நமது செடிகளின் மூலம் நாம் குணமாக்க முடியும். நமக்கு ரத்தக் கொதிப்பு இருந்தால் ரத்தக் கொட்டை கீரை குணமாக்கி விடும். சர்க்கரை நோய் இருந்தால் அதற்கு சர்க்கரை கொல்லி இருக்கவே இருக்கிறது. சளி மற்றும் கபம் வந்தால் தூதுவளை சரியாக்கி விடும். சிறுநீரகக் கற்கள் முழுமையாக கரைய யானை நெருஞ்சில் உண்டு. இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சரி இவையெல்லாம் குணமாக்குமா என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில், இந்த மூலிகைகளை எல்லாம் நமது மூதாதையர்கள் உபயோகித்து குணமடைந்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த டெங்கு, நமது மூலிகைகளினால் 7 நாளில் குணமாகிவிடும். இன்னும் சொல்லப் போனால் மருத்துவ குணம் கொண்ட நமது மூலிகைகளை இரண்டு வேளை சாப்பிட்டால் இந்த நோயின் தாக்கம் மிகப் பெரிய அளவில் குறைந்து விடும். அப்புறம் இரண்டு, மூன்றாவது நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் சாதாரணமான நிலைக்கு வந்து விடுவோம். அதிக பட்சமாக ஒரு வாரம் இந்த நோய் நீடித்தால் அதிகம். அப்புறம் வாரம் ஒரு முறை இந்த நீரையோ அல்லது கஷாயத்தையோ சாப்பிட்டால் இந்த டெங்கு நோய் நம்மை அண்டவே அண்டாது. மூன்று மூலிகைகள் இந்த டெங்கு நோய்க்கு மருந்தாக இருக்கிறது. ஒன்று நிலவேம்பு நீர், மலை வேம்பு நீர் அல்லது பப்பாளி கஷாயம்.

நிலவேம்பு இயற்கை அன்னையின் அற்புதமான ஒரு மூலிகை. இது வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க நமது மூதாதையர்கள் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதைச் சூரணமாகவும் உட்கொள்ளலாம். அப்படி செய்யும் போது நமது நாட்டு மருந்து கடைககளில் பல்வேறு மூலிகைகளுடன் இதை சேர்த்து தருவார்கள். அது இன்னும் அதிகமாகவும், சீக்கிரமாகவும் குணம் கிடைக்கும். இதே போலத்தான் மற்ற இரண்டும். இதில் ஏதாவது ஒரு மூலிகையை உட்கொண்டால் கூட போதும், பூரண குணம் கிடைக்கும். மரம் நடுவதை பலர் இன்று தலையாய கடமையாக செய்கிறோம். அதே போன்று வீட்டிற்குள் கொசு வராமல் தடுக்க ஒரு செடியும் உள்ளது. அதுதான் நொச்சி செடி. அதை நம் வீட்டின் வாசலில், மற்றும் எங்கெல்லாம் கொசு வருமோ அங்கெல்லாம் வைத்தால் "வருமுன் காப்போம்' என்கிற முறையில் நம் வீட்டை கொசு நெருங்காது. காரணம், இந்த செடியில் இருந்து வெளிவரும் ஒரு விதமான வாசனை கொசுவை அண்ட விடாது. இப்படி வேறு எந்த பக்க விளைவுகளும் இல்லாத மூலிகை மருத்துவம் இது'' என்கிறார் டெக்சாஸ் டெக் (Texas Tech) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இயற்கை விஞ்ஞானி பி.ஆறுமுகம்.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com