அப்பாவைப் பார்க்கணும்!

அருண்  வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய  தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல்.  இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி
அப்பாவைப் பார்க்கணும்!

அருண்  வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய  தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள்  முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. 

அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. 

அம்மா காயத்ரி. வயது 57. கொஞ்சம் பூசிய உடல்.  அருணுக்கு நிகரான சிவந்த அதே நிறம். இன்னும் சொல்லப் போனால் அவனைத் தாண்டிய இன்னும் கூடுதல் நிறம். அரசு அலுவலகம் ஒன்றில் உயர் பதவி. இவளைப் பார்க்க எவரும் அனுமதி பெற்றுத்தான் அறைக்குள் நுழைய முடியும்.  ரொம்ப நேர்மையானவள். சரியான நேரத்திற்கு வேலைக்கு வருபவள். ஆரம்ப காலத்திலிருந்தே எந்த ஆண்கள், அதிகாரிகளிடம் அநாவசியப்பேச்சு, வழிசல், உரசல் கிடையாது. அரசாங்க காரை வீண் படாடோபத்திற்கு உபயோகப்படுத்த மாட்டாள். அலுவலகத்திற்கு இவள் தன் காரில் தானே ஓட்டிக்கொண்டு போவாள். வருவாள். அலுவல் நேரத்தில் மட்டுமே அரசாங்கக் காரைத் தொடுவாள்.  மேலும், எந்த காரணமுமில்லாமல் யாரையும் இவள் சந்திப்பது, அரசு அல்லாத வேலைகளைச் செய்வதெல்லாம் இவளுக்குப் பிடிக்காத விசயம். கறாராக இருப்பாள். அதனாலேயே இவளைக் கண்டால் மற்றவர்களுக்குப் பயம். அரசு அலுவலங்களில் மதிப்பு, மரியாதை.

இவளுக்கு மகன் அருண் மீது ரொம்ப பாசம், பிரியம்.  அவன்தான் அவளுக்கு மூச்சு, முடிச்சு,  ஆதாரம் எல்லாம். 

முன் பக்கம் தோட்டம் உள்ள ஒரு குட்டி பங்களா போன்ற பெரிய வீட்டில் அம்மா, மகன் மட்டும் உறுப்பினர்கள்.  வாசலில் மூன்று வேளை சுழற்சி முறையில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒப்பந்த காவலாளிகள்.  மாலை தோட்ட பராமரிப்பிற்கென்று  ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு  முதியவர். பத்துப் பாத்திரம் தேய்க்க, வீட்டைக் கூட்டிப் பெருக்க என்று வீட்டு வேலைக்கு காலை, மாலை ஒரு மணி நேர வேலைக்காரி என்பதுதான் இவளது சுருக்கமான வாழ்க்கை. 

அருண் மாடிப்படிகளை விட்டு இறங்கினான். சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி அருகில் அமர்ந்தான்.

மகன் அமர்ந்தது தெரிந்தும் தாய் இவனைக் கவனிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்தாள். 

""அம்மா'' அழைத்தான்.
""சொல்லுப்பா?''
""நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்'' இவனாகவே அவள் எதிரிலிருந்த ரிமோட்டை எடுத்து மூன்றாம் ஆளாகப் பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தான். 
தொலைக்காட்சி அணைப்பால் காயத்ரி மகனைத் திரும்பிப் பார்த்தாள். 
""சுத்தி வளைக்காமலேயே விசயத்துக்கு வர்றேன். நான் அப்பாவைப் பார்க்கணும்'' மெல்ல சொன்னான். 
அவளும் அலுங்காமல் குலுங்காமல் ""எந்த அப்பாவை ?'' கேட்டாள். 
""நான் பொறக்கக் காரணமாய் இருந்த அப்பாவை''
காயத்ரி உள்ளுக்குள் கொஞ்சமாய்த் துணுக்குற்றாள். விபரம் புரியாமல்.
""அவர்தான் நீ என் வயித்துல ரெண்டு மாசமாய் இருக்கும் போதே செத்துட்டாரே'' வழக்கமாகச் சொல்வதைச் சொன்னாள். 
""ஆமாம். நான் உன் வயித்துல ரெண்டு மாச கருவாய் இருக்கும் போதுஅப்பா இரு சக்கர வாகனத்தில் போய் விபத்தில் அடிபட்டு செத்தார். அவர் மேல உனக்கு ரொம்பப் பாசம், பிரியம். அவருக்குப் பிறகு அவர் உருவம், படம் எதுவும் உன் கண்ணுல பட்டு கஷ்டம், வருத்தம் கொடுக்கக் கூடாது  என்பதற்காக உங்க திருமண ஆல்பம், நீங்க சம்பந்தப் பட்ட போட்டோ, அவர் தனி போட்டோ, துணிமணி எல்லாம்... எல்லாத்தையும் ஒன்னு விடாமல் அழிச்சே.  பெத்தவர் நிழல் பிள்ளை மேலும் விழுந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்கிற அக்கறையில் என் பெயருக்கு முன்னால் அவர் பெயரின் முதலெழுத்தைத் தலை எழுத்தாய்ப் போடாமல் உன் பெயரின் முதலெழுத்தை என் பெயருக்கு முன் தலை எழுத்தாய்ப் போட்டிருக்கே என்கிற  எல்லா செய்தியும் நான் சின்ன வயசிலிருந்தே உன்கிட்டே இருந்து கேட்டு கேட்டு சலிச்சுப் போன விசயம். எல்லாம் எனக்காக இட்டுக் கட்டி சொன்ன  பொய்'' அருண் நிறுத்தி நிதானமாக சொன்னான்.  
எதிர்பாராத பேச்சு, தாக்குதல்.  காயத்ரி அரண்டாள். முகம் இருண்டாள்.
அருண் தாயை ஆழமாகப் பார்த்துஅவளின் முகமாற்றம், உடல் மாற்றங்களை மனதால் படம் பிடித்தான்.  விடாமல்
""என் அப்பா பேர் என்னம்மா?'' என்று இதுவரை கேட்காத கேட்கத் தோன்றாத கேள்வியை முதன் முதலாகக் கேட்டான். 
கொஞ்சமாக யோசித்த காயத்ரி "" அழகேசன்''  சொன்னாள்.
அருணுக்கு அவள் தடுமாற்றம் புரிந்தது.  
""அம்மா நான் கேட்டதுக்காக இந்த பெயர் எனக்காக இப்போ உதிச்ச பெயரா, இல்லேமுன்னாடியே யோசிச்சு வைச்ச பெயரா?'' கேட்டான்.
மனதைப் படம் பிடிக்கப்பட்ட கேள்வி   
காயத்ரி உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கினாள். உடலுக்குள் எல்லாம் உடைந்தது,  உதிர்ந்தது.  
அருணுக்கு அம்மாவை ஆசுவாசப்படுத்தத் தோன்றியது. அதே சமயம் அடுத்ததைத் தெரிந்து கொள்ளவும் ஆவலாய் இருந்தது. அதனால்கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு.
""அம்மா எனக்குத் தெரிஞ்சு நான் உன்னைப் பெத்த அம்மா அப்பாவைப் பார்த்ததே இல்லே. அவுங்களும் இங்கே வந்தது கிடையாது. நாமும் அவுங்களைத் தேடிப் போனது கிடையாது. ஏன் அவுங்களைப் பத்தின பேச்சே உன்கிட்ட இல்லே. அவுங்க இருக்காங்களா இல்லியா ?'' கேட்டான்.
~ மகன் ஏதோ விபரம் தெரிய ஆசைப்படுகிறான். அதனால் வில்லங்கமாகக் கேட்கிறான்.  காயத்ரிக்குத் தெளிவாகத் தெரிந்தது.  
""இல்லே'' மெல்ல சொன்னாள். 
""உனக்குக் கூடப் பொறந்த சகோதர சகோதரிகள்?''
""யாரும் கிடையாது'' அதற்கும் பொறுமையாகப் பதில் சொன்னாள்.  
""எல்லாருமே செத்துப் போயிட்டாங்களா?''
""அம்மா, அப்பா செத்துப் போயிட்டாங்க. சகோதரன் சகோதரிகள் கிடையாது'' விளக்கினாள்.  
""தனியாய்ப் பொறந்தியா?'' 
""ஆமாம்.'' 
""உன் அம்மா அப்பா எப்போ செத்துப் போனாங்க?''
"நீ ஏன் இந்த கேள்வி எல்லாம் கேட்குறே. உனக்கு என்ன விபரம் வேணும்?' கேட்க காயத்ரிக்குள் துடித்தது. போகட்டும்  எதுவரை போகும் பார்க்கலாம் என்று  நினைத்தாள். அதனால், 
 ""நான்பொறந்ததும்'' 
""அப்போ உன் வளர்ப்பு, படிப்பு?''
""எல்லாம் ஒரு அனாதை ஆசிரமம்''
""நமக்குச் சொந்தக்காரங்க?'' 
""யாரும்  கிடையாது'' 
""ஏன் ?''
""அனாதை சுமையாகிடுவேன் என்கிற பயத்துல யாரும் என்னைத் தேடி வரலை. எனக்கும் யாரையும் தெரியாது. தேடிப் போகலை.''
""அம்மா உன் திருமணம்?''
""முப்பது வருசத்துக்கு முந்தி.''
""அப்பா?''
""அவரும் ஓர் அரசாங்க அதிகாரி''
""அவர் எந்தத் துறையில் அரசாங்க அதிகாரி?''
அதற்கு மேல் காயத்ரிக்குப் பொறுமை இல்லை.
""அருண்  உனக்கு என்ன விபரம் வேணும். அதை நேரடியாய்க் கேள்'' கொஞ்சம் கடுமையாகவே  சொன்னாள்.
""அம்மா இந்த அனாதை ஆசிரமம், படிப்பு, வேலையும் மட்டும்தான் நீ சொன்னதுல உண்மை. மத்ததெல்லாம் பொய்'' அருண் மெல்ல சொன்னான்.
காயத்ரி அதிரவில்லை. அவனை அமைதியாகப் பார்த்தாள். அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான்? என்பதற்காகக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். 
அருண் அவள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை. தொடர்ந்தான்...
""அம்மா உனக்கு அம்மா அப்பா கெடையாது. யாருன்னே தெரியாது. அனாதை . ஓர் அனாதை ஆசிரமத்துல வளர்ந்தே. அங்கேயே பட்டப் படிப்பு வரைக்கும் படிச்சே. உன் படிப்புத் தகுதிக்கு நல்ல அரசாங்க வேலை கிடைச்சுது. வெளியே வந்தே, வசதியானே. இதுதான் உண்மை. சரியா?'' கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான். 
மெüனம் சம்மதத்திற்கு அடையாளமாய் காயத்ரி அமைதியாய் இருந்தாள். 
""இப்போ சொல்லு? நான் எப்போ பொறந்தேன், எப்படி பொறந்தேன்?'' அருணும் அவளை விடாமல் கேட்டான். 
""என் பொறப்பு வளர்ப்பெல்லாம் சரியாய்த் தெரிஞ்ச உனக்கு  இதுவும் தெரிஞ்சிருக்கணும்; நீயே சொல்லு?''
""சொல்றேன். அம்மா உனக்கு அம்மா அப்பா இல்லே. சாதி சனம் கெடையாது.  தனியா வாழ்ந்த உனக்குத் துணை தேவை. பெண்கள் ஆசிரமத்தில் வளர்ந்த உனக்கு ஆண்கள் மேல் நாட்டம், ஈர்ப்பு கிடையாது. அதனால் திருமண ஆசை இல்லே. ஆனாலும் குழந்தைப் பெத்துக்க ஆசை. அதுக்காக என்னை செயற்கைக் கருத்தரிப்பு மூலம் சுயமாகப் பெத்தே. நான் சொன்னதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை. சரியா?''
"இவனுக்கு இந்த விசயங்களெல்லாம் எப்படித் தெரியும்?'  என்கிற யோசனையில்      
""சரி'' - மென்று விழுங்கினாள். 
""பத்து மாசம் சுமந்தவளில்லையா? அதனால பெத்தப் பிள்ளையான என் மேல உனக்கு பாசம் அதிகம்.  அம்மாவும் அப்பாவுமாய் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்தே. எனக்கு ஒன்னுன்னா துடிச்சே. இன்னைக்கும் துடிக்கிறே. நான் வளரும்போது அப்பா எங்கேன்னு கேட்டால் பதில் சொல்றதுக்காக அப்பா அப்படிச் செத்தார், இப்படிச் செத்தார், அவர் நினைவே இருக்கக் கூடாது என்கிறதுக்காக கலியாண ஆல்பம், புகைப்படமெல்லாம் தொலைச்சேன்... அழிச்சேன்... கட்டு கதைகள் சொன்னே. அதே கட்டுக் கதைகளை நீ இன்னைக்கும் சொல்றே. இதுவரைக்கும் சொல்றே. சரியா?''
""சரி''
""ஆனாஅம்மா. இங்கே ஒரு சின்ன தப்பு நடக்குது.''
""என்ன?'' 
""நீ என் மேல வைச்சிருக்கும்  பாசத்துல  கால்வாசி அளவு கூட எனக்கு உன் மேல கிடையாது''
""அருண்'' அதிர்வாய்ப் பார்த்தாள்.  
""நிசம்  எனக்கு அப்பா மேல பாசம்மா. நீ என் மேல கொட்டும் மொத்தப் பாசமும் அப்படியே இரட்டடிப்பா அப்பா மேல போய்க்கிட்டிருக்கு''
""அருண்'' காயத்ரி இப்போது அலறினாள். 
""உண்மைம்மா. அந்தப் பாசம். இயற்கையாவே என் ரத்தத்துல கலந்து போயிருக்கு. அப்படித்தான் நெனைக்கிறேன். அப்படித்தான் ஆகுது. இல்லே எனக்கு அப்பா இல்லை என்கிற ஏக்கம் ஒரு காரணமாய் இருக்கலாம். இல்லே தாய்ப் பாசமே பார்த்த எனக்கு தந்தை பாசத்துக்கு ஏங்கி தாவி இருக்கலாம். அதனாலதான் எங்கேயும்அப்பாவோட வர்ற, வளர்ற பிள்ளைகளை ஆசையாய், ஏக்கமாய்ப் பார்க்கும் பழக்கம் எனக்குத் தொத்தி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.  அப்பா கைப்பிடிச்சு நடக்க அவர் முதுகுல சவாரி செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்மா'' ரொம்ப தழைவாய்ச் சொன்னான்.
காயத்ரிக்கு மகனின் மனசு, ஏக்கம் புரிந்தது. 
""இதெல்லாம் உனக்கு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இதை எல்லாம்; உனக்கு செய்தேனே?''
""நீ மகன் மனசு புரிஞ்சவள். அதனால நீ எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து ஒன்னுக்குப் பத்தாய்ச் செய்தே. பையன் அப்பா எங்கேன்னு கேள்வி கேட்பான்னு எதிர்பார்த்து அதுக்கான பதிலை அப்பவே தயாரிச்சு என்கிட்ட அப்படியே சொன்னே.  ஆனா நீ எனக்குப் பார்த்துப் பார்த்து செய்த அத்தனையும் சத்தியமா வீண். மனசுல ஒட்டவே இல்லே. அந்த அப்பா ஏக்கம்,  தாக்கம் எனக்குத் தீரவே இல்லே.  இன்னைக்கும் அப்படியே இருக்கு.''
""சரி. இப்போ அதுக்கு என்ன செய்யணும்?''
""எனக்கு அப்பா வேணும்''
""அது எப்படி முடியும்?''
""நான் அப்பாவைப் பார்க்கணும்''
""முடியாது''
""முடியும்''
""அது எப்படி முடியும்?''
""நீ எனக்காகச் சிகிச்கை எடுத்துக்கிட்ட மருத்துவமனையில் போய் விபரம் கேட்பேன்.''
""கொடுக்க மாட்டாங்க.'' 
""கொடுக்க வைப்பேன்.''
""அருண்''
""ஏன்ம்மா அதட்டுறே? உனக்கு இது அநாவசியம்,  தேவை இல்லாதது. ஆனா எனக்குத் தேவை''
""தெரிஞ்சு நீ அதனால என்ன சாதிக்கப் போறே.?''
""சாதிக்கிறது அப்பாற்பட்ட விசயம். எனக்கான ஆதாரத்தை நான் தெரிஞ்சிக்க வேணாமா?  அனாதைங்களுக்கெல்லாம் கூட அப்பா அம்மாக்கள் இருக்காங்க. ஏன் உனக்கே அப்பா, அம்மா இருக்காங்கன்னு தெம்பு, தைரியமா சொல்றே... எனக்கு? என்னை மாதிரி பிறந்த பிள்ளைகளுக்கு எங்கே அப்பா ? தெரிஞ்சுக்க எனக்கு உரிமை கிடையாதா, தெரிஞ்சுக்கக் கூடாதா?''
""அதைத் தெரிஞ்சிக்க முடியாது அருண். 
அப்படியே கஷ்டப்பட்டு தெரிஞ்சிக்கிட்டாலும் அதனால பிரயோஜனம் கிடையாது''
""பிரயோஜனம் இல்லேன்னு சொல்லாதேம்மா. என் ஏக்கம், தாக்கத்தைத் தீர்க்கவாவது எனக்கு அப்பா இன்னார்ன்னு தெரியணும்.  எனக்கும் அப்பா இருக்கார்ன்னு தலை நிமிர்ந்து நடக்கணும். மனம் சாந்தியடையணும்''
""உன் மனக்கதவைச் சாத்து அருண். அவரை யாருன்னு கண்டு பிடிக்க முடியாது. கண்டுபிடிச்சாலும்அதுல நிறைய சிக்கல் இருக்கு.''
""எல்லா சிக்கலும் எனக்குத் தெரியும். நான் அதைப் பத்தி நிறைய யோசிச்சிருக்கேன்.''
""எப்படி அருண்?'' 
""உன் வளர்ப்பு, என் பொறப்பு சரித்திரம் என் கைக்குக் கிடைச்சதுமே நான் அதைப்பத்தி நிறைய யோசிச்சாச்சு''
""புரியலை?'' குழப்பமாகப் பார்த்தாள். 
""அம்மா பத்து நாட்களுக்கு முன் வீட்ல நான் எதையோ தேடப் போய் நீ பத்திரப்படுத்தி ஒளிச்சு வைச்சிருந்த என் சம்பந்த மருத்துவமனை தாட்கள், உன் அனாதை ஆசிரம சான்றிதழ்கள் எல்லாம்  மொத்தமா என் கைக்குக் கிடைச்சுது'' 
""அருண்''
""அம்மா நான் ஆடிப் போய்ட்டேன். உன்னை நினைச்சி உருகிப் போய்ட்டேன். ஆனாலும் உன் மேல பாசம் வரலை. அப்பா நேசம் விடலை.''
மகன் பேசிய பேச்சு, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இப்போது அர்த்தம் புரிந்தது காயத்ரிக்கு.  அமைதியாய் அவனைப் பார்த்தாள். 
""என் கையில கிடைச்ச அந்த மொத்தத் தாள்களையும் ஒன்னு விடாமல் என் கைபேசியில் படம் புடிச்சி பதிவு செய்து பத்திரப்படுத்திட்டேன். போற இடத்தில் நகல் கேட்டால் எடுத்துக் காட்டுறதுக்கும் அவற்றை என் பயணப் பையில் வைச்சு பத்திரப்படுத்திட்டேன். நான் உன்கிட்ட சேதி சொல்லிட்டு கிளம்பணும். அதான் பாக்கி. சேதியும் சொல்லிட்டேன். கிளம்புறேன்.'' - எழுந்தான். 
~ தெளிவான யோசனை, நடப்பு, முடிவு  - காயத்ரிக்குப் புரிந்தது. 
ஆனாலும் மகனை மருட்சியாகப் பார்த்தாள். 
""ஒன்னும் பயப்படாதே  நான் அலுவலகத்திற்குப் பத்து நாள் விடுப்பு. அதனால வேலையை பத்தின கவலை, அக்கறை இல்லே. அப்பாவைப் பார்க்கணும். அதான் வேலை. முடிஞ்சதும் நான் பத்திரமா திரும்பி வருவேன். நீயும் பத்திரமா இரு.'' சொல்லி நடந்து மாடிப்படி ஏறினான். 
காயத்ரி   எந்தவித அசைவுமின்றி அவனைப் பார்த்தபடி இருந்தாள். 

கரூர் புறநகர்ப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அந்த அன்னைத் தெரசா மகப்பேறு மருத்துவமனை முன்புறம்  தோட்டம், வாகன நிறுத்தம் வசதிக்காக நிழல் தரும் மரங்கள், ஷெட்டுகள் பின்னே மூன்றடுக்கு கட்டடங்கள் என்று அருமையாக அமைந்திருந்தது. 
அருண் எந்தவித அலட்டலுமில்லாமல் பேருந்து நிறுத்தத்திலிருந்து வாடகைக் காரில் வந்து இறங்கினான். 
தன் பயணப் பையுடன் படி ஏறினான். 
முகப்பிலேயே நிறுவனர், தலைமை மருத்துவர் பெயர்களெல்லாம் வரிசையாக இருந்தன. 
வரவேற்பை அணுகினான். அங்கு சுண்டி இழுக்கும் அழகில் உள்ள இளம்பெண் ஒரு காதில் போனும், மறு காதில் கைபேசியுமாக பேசிக் கொண்டிருந்தாள். அவள் முடித்ததும்
""நான் டாக்டர் சதாசிவத்தைப் பார்க்கணும்'' - அருண் சொன்னான்.  
""என்ன விசயமா பார்க்கணும்?'' -  குரல் குளிர்ச்சியாக வந்தது. 
""குழந்தை சம்பந்தமா'' இழுத்தான்.
""நீங்க லிப்ட்ல போனீங்கன்னா முதல் மாடி. முப்பத்தி இரண்டாவது அறை'' சொன்னாள்.   
""இதுக்கு முன்னாடி அவரைப் பார்க்க நிறைய ஆட்கள் இருக்காங்களா?''
""இல்லேன்னு நெனைக்கிறேன். சார் கொஞ்சம் ஓய்வாய்த்தான் இருக்கார்.'' 
அருண் வரவேற்பு அறைக்கு எதிரிலுள்ள மின்தூக்கியில் ஏறினான்.
முதல் மாடி, 32 இரண்டாவது அறை முன் தடுப்பாக ஓர் இளைஞி இருந்தாள்.
""நான் சாரைப் பார்க்கணும்''
அவள் எழுந்து அடைத்திருந்த கதவு கண்ணாடி வழியே உள்ளே பார்த்தாள்.
""கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. சார் பைல் பார்த்துக்கிட்டிருக்கார்.''
பக்கவாட்டில் வரிசையாய் இருக்கும் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான். 
"அம்மா இப்போது அலுவலகம் போயிருப்பாளா இல்லை, விடுப்பெடுத்து வீட்டில் தங்கி தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருப்பாளா?' மனம் நினைத்தது. 
அடுத்து யோசிக்க விடாமல், ""சார்  நீங்க உள்ளே போகலாம்'' அந்த பெண் குரல். 
பையுடன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ஏ.சி. குளிர் முகத்திலிருந்து மொத்த உடலையும்  வருடியது. 
டாக்டர் சதாசிவம் வயது 55. நெற்றியில் சுருக்கம். கோட் சூட் போட்டு முறையாக சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேசை மேல் கணினி, பைல்கள். எதிர் சுவரில் உள்ள பெரிய திரையில் கண்காணிப்புக் கேமராக்களின் நடப்பு ஒளி ஓட்டங்கள் என்று அனைத்து நிர்வாக அம்சங்களுடன் இருந்தார்.  
""வணக்கம் சார்''
அவர் இவனுக்குப் பதில் வணக்கம் சொல்லாமல் எதிர் நாற்காலியைக் காட்டினார்.
அருண் பையை நாற்காலிக்கருகில் காலடியில் தரையில் வைத்துவிட்டு அமர்ந்தான்.  அடுத்து தன் கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தான். 
தொடு திரையில்அவன் அம்மாவுடன் இருந்தான். 
""சார் நான் அருண். இது அம்மா. பேர் காயத்ரி'' சொல்லி கைபேசியை அவரிடம் கொடுத்தான். 
"எதற்கு இப்படி ஒரு அறிமுகம்?'  என்று குழம்பிய சதாசிவம் அவன் கைபேசியை சர்வ சாதாரணமாக  வாங்கிப் பார்த்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்து 
""சொல்லுங்க?'' அருண் முகத்தைப் பார்த்தார்.  
""சார்  எனக்கு வயசு  இருபத்தி ஏழு.  என்னை என் அம்மா இங்கே செயற்கை கருத்தரிப்பு மூலம்  பெத்திருக்காங்க. அதுக்கான ஏற்பாட்டை நீங்கதான் செய்து மருத்துவம் பார்த்திருக்கீங்க'' நிறுத்தினான்.
சதாசிவத்திற்கு அவன் அறிமுகத்திற்கான காரணம் புரிந்தது. 
""அப்படியா?'' என்றார். 
""ஆமாம் சார். நீங்க கையெழுத்துப் போட்டு மருத்துவம் பார்த்த மொத்த தாள்களும் என்கிட்ட இருக்கு. எல்லாம் என் கைபேசியில் படம் புடிச்சி வைச்சிருக்கேன். தேவைப்பட்டால் உங்களிடம் காட்ட அசலும் என் பையில் இருக்கு சார்.'' சொல்லியபடி
அருண் தன் கைபேசியில்இருக்கும் அவற்றை அவரிடம் காட்டினான். 
சதாசிவம் அதை வாங்கி ஒவ்வொன்றாய்ப் பொறுமையாய்ப் பார்த்து விட்டு அவனிடம் திருப்பினார். 
""இப்போ எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் சார்''
""என்ன உதவி?''
""நான் என் அப்பாவைப் பார்க்கணும்''
""புரியலை?''
""என் தாய் வயிற்றில் நான் கருவானதுக்கு காரணமான அந்த ஆளைப் பார்க்கணும்''
இப்போது சதாசிவத்திற்குப் புரிந்தது. 
""ஏன் ஏதாவது பிரச்னையா?'' கேட்டார்.
""இல்லே சார். அந்த ஆள் முகத்தைப் பார்க்கணும்ன்னு ஆசை.உதவணும்''
""மன்னிக்கணும் அருண். அது யார்கிட்டேயும் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது.''
""ஏன் சார் ?''
""அது மருத்துவமனைகளின்  சட்ட திட்டம், கட்டுப்பாடு.''
""தெரியும் சார். ஆனா, ஒருத்தர் உயிரணுக்களிலிருந்து நாங்கள் இத்தனைக் குழந்தைகளை உருவாக்கி சாதனை செய்திருக்கிறோம்ன்னு  வெளிநாட்டில் ஒரு மருத்துவமனை அறிக்கை விட்டதாய்  சமீபத்தில் தினசரி செய்தித்தாளில் படிச்சேன். அது எப்படி?'' 
""நானும் படிச்சேன். அது சம்பந்தமா இங்கே விவாதம் நடந்துகிட்டு இருக்கு.'' 
""எனக்கு அது தேவை இல்லாத விசயம் சார். இன்னார் உயிரணு இன்னாருக்குச் சேர்த்திருக்கு என்கிற விபரம் அது சம்பந்தப்பட்ட டாக்டர், மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரியும் இல்லியா?'' 
""கண்டிப்பாத் தெரியும்''
""அப்படி எனக்கு உயிர் கொடுக்க யார் உதவினாங்க என்கிற விபரம்  உங்களுக்குத் தெரியும் இல்லியா ?'' 
"" தெரியும்''
""அதுதான் சார் எனக்கு வேணும்''
""அதான் சொல்லக் கூடாது. ரகசியம்''
""ஏன் சார்?''
""அதுல நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கு. பொது மருத்துவமனைகளில் ரத்த வங்கி செயல் படுவதுபோல்இப்படிப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் விந்தணு சேமிப்பு வங்கிகளும் செயல்படுது. ரத்த வங்கிகளில் இத்தனை வயதுக்கு மேல்தான் ஒருத்தர் ரத்தத்தானம்; கொடுக்கலாம், விற்கலாம். அறுபது வயசுக்கு அப்புறம் அவர் கொடுக்கக் கூடாது. கொடுப்பவர் உடலில் எந்தவித நோய், நோய்த் தொற்றுகள் இருக்கக் கூடாது. அவர் மது, புகை, போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கக் கூடாது போன்ற பல சட்ட திட்டங்கள் இருப்பது போல்இந்த சேமிப்பிற்கும் அதைவிட கடுமையான, கறாரான மருத்துவப் பரிசோதனைகள்  இருக்கு. அது எல்லாத்தையும்விட முக்கியம் விந்து விற்பவர், தானம் செய்பவர் முகம், முகவரிகள் வெளி உலகுக்குத் தெரிவிக்க மாட்டோம். காரணம். ஓர் ஆண், பெண் உயிரணுக்களிலிருந்து பல குழந்தைகளை உருவாக்குவோம். ஆளை அடையாளம் காட்டினால் எல்லா குழந்தைகளுக்கும் இது என் அம்மா, இது என் அப்பான்னு சொந்தம் கொண்டாடினால் கொடுத்தவர் வாழ்க்கை சிக்கலாகிவிடும்.  வெளி நாடுகளில் இந்த விந்து சேமிப்பு விவகாரம் ரத்ததானம் போல்... ரொம்ப சர்வசாதாரணமாய் நடக்குது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் வெட்கம், மானம், மரியாதை, கூச்சம் நாச்சம் விசயங்களால் இலைமறைவு காய்மறைவாய் நடக்குது. அதனால் இது சம்பந்தமான எந்த விபரங்களையும் யாருக்கும் மறந்தும் தெரிவிக்க மாட்டோம்.'' சதாசிவம் சொல்லி நிறுத்தினார்.
இதை எல்லாம் பொறுமையாய்க் கேட்ட அருண்...
""இது எல்லாம் எனக்கும் தெரியும் சார்.  நான் அப்பா முகத்தைப் பார்க்கணும். அவ்வளவுதான் ஆசை. இது பேராசை, பெரிய ஆசை கிடையாது. நியாயமான ஆசை.  ஒரு குழந்தைக்குக் கண்டிப்பா ஒரு அம்மா அப்பா இருந்தே தீரணும். இது தவிர்க்க முடியாதது. இன்றையச் சூழ்நிலையில் நான் அப்படி இல்லே. அம்மா இருக்காங்க. அப்பா இல்லே. இருந்தும் அவர் முகம் தெரியாமல் வானத்திலிருந்து குதிச்சு என் அம்மா வயித்துல புகுந்து பொறந்த தெய்வக் குழந்தை மாதிரி இருக்கேன். இது எனக்குப் பிடிக்கலை. மனம் உளைச்சலாய் இருக்கு. எனக்கு மூலகாரணமானவர் முகத்தைப் பார்த்தால் இதெல்லாம் தீரும். மனசு ஆறும்'' - சொன்னான்.
இதுவரை...இதைப் பற்றி இப்படி சிந்திக்காத சதாசிவத்திற்கு அருண் சொன்னது அனைத்தும் அதிர்ச்சி;  ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம்... எல்லாம் நியாயமாகவும் பட்டது. இதற்குத்  தீர்வு? இவருக்குள்ளேயே ஓர் உதைப்பு, உலுக்கல் ஏற்பட்டது.  வினாடி நேரம் திகைத்தார். பின்... மெல்ல...
""அது கொடுக்கக் கூடாது அருண். இன்னும் நடைமுறை சிக்கலைச் சொல்றேன். அன்றையச் சூழ்நிலையில் உங்க அம்மா கரு முட்டையோடு   திருமண வயசைத் தொட்ட 21 வயசு இளைஞன் கரு அணுவைச் சேர்த்திருந்தால்... இன்னைக்கு... அந்த ஆள் உங்க வயசையும் சேர்த்து... நாப்பத்தி எட்டு, அம்பது வயசு ஆனவராய் இருப்பார். தேடிப் போய் பார்த்த உனக்கும் வயசு, உருவம் எல்லாம் பொருத்தமாய் இருக்கும். திருப்தியாய் இருக்கும். நாப்பது வயசு ஆள் கருவினைச் சேர்த்திருந்தால்...இன்னைக்கு அவருக்கு 67 வயசு. பார்க்கிற உனக்கு எப்படி இருக்கும். இந்தக் கிழவனையா கஷ்டப்பட்டு; பார்க்க வந்தோம்ன்னு மனம் வெறுக்கும், கசக்கும். அப்புறம்... அன்னைக்குக் கொடுத்தவன்... இளவயசு, எந்த கெட்ட பழக்க வழக்கமுமில்லாத யோக்கியமானவனாவே இருக்கலாம். இன்னைக்கு? ஆள் அப்படியே மாறி...  குடிகாரன், ரவுடி, கொலைக்காரனாய், பிச்சைக்காரனாய் இருக்கலாம். வினையை விலை கொடுத்து வாங்கிய கதை. மனசு நொந்து போகும்!''
 

அருண் மெளனமாய் இருந்தான். 

( அடுத்த இதழில்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com