• லேனா தமிழ்வாணன் மேடையில் பேசுவதற்கு முன் "ஸ்ட்ராப்' வாட்சை "ஆன்' செய்துவிட்டுத் தன் பேச்சைத் தொடங்குவார். கூட்டம் நடத்துபவர்கள் கொடுக்கும் நேரத்தைத் தாண்டிப் பேசக்கூடாது என்பதற்காகவாம்!
• இலக்கியக் கூட்டங்களில் திருப்பூர் கிருஷ்ணன் பேசும்போது, பெரும்பாலும் "சென்டிமென்ட்' ஆக ஒரு கதையைச் சொல்லிவிட்டுத் தன் உரையை நிறைவு செய்வார்.
• தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகர், தமது திருமண மண்டபத்தை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும்போது, குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
• திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன், பாரம்பரிய விளையாட்டுக் கலைகள் மீது ஆர்வம் உடையவர். விளையாட்டு பயிற்சியாளர்கள் பற்றி செய்தி வந்தால் அவர்களுக்கு கடிதம் எழுதிப் பாராட்டுவார்!
• எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாணவர்கள் ஒன்று சேர்ந்து "கூடு' என்ற ஆய்விதழை தொடங்கியிருக்கிறார்கள். அதில், மாணவர்களின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெறுகிறது. முதல் இதழ் விரைவில் வெளியாகிறது.