• கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்கி பல கீர்த்தனைகளை எழுத்தாளர் பெருமாள்முருகன் அவருக்கு எழுதித் தந்துள்ளார். பனைமரம் பற்றியும், கொங்கு வட்டாரம் பற்றியும் எழுதப்பட்டுள்ள இந்தக் கீர்த்தனைகளை டிசம்பர் சீசனில் பாடப்போகிறார்
டி.எம்.கிருஷ்ணா.
• "ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போன்று நானும் சினிமாவுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதும் சமூக சேவை செய்வதும் தான் எனது பட்டியலில் இப்போது முதலிடத்தில் இருக்கின்றன'' என்கிறார் அண்மையில் உலக அழகி பட்டம் பெற்ற மானுஷி சில்லார்.
• சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் இதுவரை 67 மாரத்தான் பந்தயங்களில் ஓடியுள்ளார். உலகம் முழுவதும் நடந்து வரும் மாரத்தான் பந்தயங்களில் ஓடிய அனுபவங்களின் சேகரிப்பில் "ஓடலாம் வாங்க' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
• பெங்களூரில் எழுத்தாளர்கள் தங்கும் இயற்கை குடில் ஒன்றில் இரண்டு வாரங்கள் இருந்து வந்திருக்கிறார் கவிஞர் ஆனந்த். தங்கியிருந்த காலத்தில் "சுற்றுவழிப்பாதை' என்ற பெயரில் எழுதிவரும் தத்துவ நாவலை செப்பனிட்டு திரும்பியிருக்கிறார்.
• பாரதி புகழ் பரப்பும் பணியில் குறிப்பிடத்தக்கவர்கள் சீனி.விசுவநாதன்(படம்)}எதிரொலி விசுவநாதன். இந்த இரண்டு விசுவநாதன்களின் பிறந்தநாளும் நவம்பர் 22 தான்!