இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பையில் உள்ள நூர்முகம்மதி என்ற அசைவ உணவகத்திற்கு அடிக்கடி சென்று சாப்பிட ரொம்பப் பிடிக்கும். இது "சிக்கன் சஞ்சு பாபா' என்ற புதிய சிக்கன் கறிக்கு வழி வகுத்தது. எப்படி?
ஒருநாள் உணவக முதலாளியிடம், இவர் தனக்கு ஒரு புது ரெசிபி தெரியும் எனக் கூறி அதனை அந்த உணவக சமையலறையில் செய்து காட்ட, அது முதலாளிக்கு ரொம்பப் பிடிக்க, பிறகு அவர், "தான் இதனை செய்து விற்க சஞ்சய் தத் அனுமதி தர வேண்டும்' எனக் கோர, அவரும் அனுமதிக்க சிக்கன் சஞ்சு பாபா பிறந்தது.
கடந்த ஆண்டு சஞ்சய் தத், ஜெயிலிலிருந்து வெளியே வந்த போது, அதனை கௌரவிக்கும் விதமாக, இந்த உணவகம் "சிக்கன் சஞ்சு பாபா'வைச் செய்து வாடிக்கையாளர்கள்அனைவருக்கும் இலவசமாய் வழங்கியது!